திமுக தலைமையில் 27-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்... காணொலி மூலம் நிகழும் சந்திப்பு
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 27-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருவதால் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதற்காக தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால் மருத்துவம் தொடர்பான விவகாரம் என்பதால் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அவசியமில்லை என முதலமைச்சர் பதில் அளித்தார்.
இந்நிலையில் தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டாததை அடுத்து திமுக அந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. வரும் 27-ம் தேதி திங்கள்கிழமை காலை 10.30 மணிக்கு மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அரசின் நிர்வாக தோல்வி குறித்து விவாதிக்கப்படும் என திமுக தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் திமுக மூன்றாவது முறையாக நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே திங்கள்கிழமை நடைபெறும் கூட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராக கண்டன தீர்மானங்கள் நிறைவேற்றக் கூடும் எனக் கூறப்படுகிறது. மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி அனைத்துக் கட்சிகள் சார்பில் போராட்டம் நடத்துவது பற்றியும் கலந்து ஆலோசிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
அதிமுகவை கழற்றிவிடுகிறோம்-.காங்.க்கு குட்பை சொல்லுங்க-திமுகவுக்கு சிக்னல் கொடுத்தது சிபிஆர். பேட்டி?
மேலும், தமிழக ஆளுநரை சந்தித்து முறையிடுவது தொடர்பாகவும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்துபேசி முடிவெடுக்கப்படும் என்றும், குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5,000 வழங்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.