திமுகவா.. தவெகவா? யாருடன் கூட்டணி.. தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல் நாளை முக்கிய ஆலோசனை?
சென்னை: தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக தொடர்ந்து காலம் தாழ்த்தி வரும் நிலையில், யாருடன் கூட்டணி என்பது குறித்து தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி, கார்கே, வேணுகோபால் ஆகியோர் நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாளை டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் பயிலரங்கம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்துக்கு இடையே ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. திமுகவில் உள்ள கட்சிகள் இந்த முறை கூடுதல் சீட் கேட்பதால் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை அந்தக் கட்சியில் தாமதம் ஆகி வருகிறது.

திமுக காங்கிரஸ் கூட்டணி
குறிப்பாக திமுக கூட்டணியில் உள்ள மிக முக்கிய கட்சியான காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதோடு 41 சீட்கள், 2 ராஜ்யசபா சீட் என அடுக்கடுக்காக டிமாண்ட் வைத்து திமுக தலைமையை அதிரவைத்து வருவதாக சொல்லப்படுகிறது. காங்கிரஸ் கட்சி கிரிஸ் சோடங்கர் தலைமையில் பேச்சுவார்த்தை குழு அமைத்து காத்திருந்தாலும் கூட திமுக இன்னமும் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையை தொடங்காமல் உள்ளது.
மற்றொரு பக்கம் காங்கிரஸில் உள்ள சில தலைவர்கள் விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைக்க விருப்பப்படுகிறார்கள். அதுமட்டும் இன்றி சில காங்கிரஸ் நிர்வாகிகள் திமுகவை சீண்டும் விதமாக வெளிப்படையாகவே பேசி வருவதை திமுக தலைமை விரும்பவில்லை.
தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை
இதனால், தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை காலம் தள்ளினால் காங்கிரஸ் வழிக்கு வரும் என்று திமுக கருதுவதாக அரசியல் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. இத்தகைய பரபரப்பான சூழலில், டெல்லியில் நாளை தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் காங்கிரஸ் தலைமை ஆலோசனை நடத்த உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் பயிலரங்கம் நாளை டெல்லியில் நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்கிறார்கள். இந்த பயிலரங்கத்திற்கு இடையே யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக கார்கே மற்றும் ராகுல் காந்தி, வேணுகோபால் ஆகியோர் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
யாருடன் கூட்டணி அமைக்கலாம்?
ஏற்கனவே, கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளிடம் தனித்தனியாக ராகுல் காந்தி, கார்கே உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். இந்த சூழலில் மீண்டும் கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் தலைமை கருத்து கேட்க உள்ளது.
யாருடன் கூட்டணி அமைக்கலாம்? தமிழகத்தில் உள்ள கள நிலவரம் உள்ளிட்டவை பற்றி ராகுல் காந்தி, கார்கே, கேசி வேணுகோபால் ஆகியோர் கருத்து கேட்க உள்ளனர். தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஏற்கனவே டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில், நாளை நடைபெற இருக்கும் பயிற்சி பட்டறை கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.
காங்கிரஸுக்கு தவெக கொடுக்கும் ஆஃபர்
அப்போது ராகுல் காந்தி சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சி மீண்டும் நிர்வாகிகளிடம் ஆலோசனை கேட்க இருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் கட்சிக்கு 70 தொகுதிகள், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என ஆஃபரை வழங்கு ரெடியாக இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி நாளை நடத்த இருக்கும் ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications