ஆட்சியில் பங்கு.. காங்கிரஸ் தலைமை இதுவரை திமுகவிடம் பேசவில்லை.. தெளிவாக சொன்ன டிகேஎஸ் இளங்கோவன்!
சென்னை: ஆட்சியில் பங்கு என்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தலைமை இதுவரை திமுகவுடன் பேசவில்லை என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். 2004ல் இருந்து காங்கிரஸ் - திமுக கூட்டணி தொடர்ந்து வருவதாக கூறிய அவர், ஆட்சி பங்கு கோரிக்கை வைக்கப்பட்டால் இறுதி முடிவை முதல்வர் ஸ்டாலின் எடுப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
திமுக - காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையில் இன்னும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு உறுதி செய்யப்படவில்லை. திமுக எம்பி கனிமொழி நேரடியாக ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோரை சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் வரை ஆலோசனை நடத்திவிட்டார். ஆனாலும் காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகள் மற்றும் ஆட்சியில் பங்கு கோரிக்கையில் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் திமுக - காங்கிரஸ் இடையிலான கூட்டணி தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் காங்கிரஸ் கட்சியின் கூட்டணிக்காக விஜய் 2 மாதங்களாக காத்திருக்கிறார். அதற்கேற்ப காங்கிரஸ் கட்சியின் சீனியர் நிர்வாகிகள் சிலரும் விஜய்யுடன் சந்திப்பு நடத்தி இருக்கின்றனர். இப்படியான சூழலில், நாளை முதல் திமுக 28 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்களை நடத்த உள்ளது.
இதுகுறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் டிகேஎஸ் இளங்கோவன், எம்பி கனிமொழி சோமு மற்றும் எம்எல்ஏ எழிலன் மூவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசுகையில், திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை மக்களுக்கு எடுத்து செல்வதற்கான பிரச்சாரப் பயணத்தை திட்டமிட்டுள்ளோம். திமுக மீதான குற்றச்சாட்டுகளை களையெடுக்க இந்த பிரச்சாரம் செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டை மத்திய அரசு திட்டமிட்டு புறக்கணிக்கிறது. அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்று பெயரில் வைத்துக் கொண்டு, அண்ணாவின் கொள்கையை மறந்துவிடுகிறார்கள். 2004ல் இருந்து காங்கிரஸ் கட்சி எங்களுடன் கூட்டணியில் இருக்கிறார்கள். 2006 சட்டசபைத் தேர்தலின் போது திமுக எம்எல்ஏ-க்கள் எண்ணிக்கை குறைவாக இருந்த போது கூட, அவர்கள் ஆட்சியில் பங்கு கேட்கவில்லை.
வெளியில் இருந்துதான் காங்கிரஸ் கட்சி ஆதரித்தது. இப்போதும் கூட காங்கிரஸ் கட்சி தலைமையில் இருந்து ஆட்சியில் பங்கு குறித்து பேசவில்லை. ஒருவேளை ஆட்சியில் பங்கு என்று பேசினால், அதனை முதல்வர் ஸ்டாலினுடன் பேச வேண்டும். இறுதி முடிவை ஸ்டாலின் எடுப்பார். மற்றவர்கள் பேசுவதற்கு நாங்கள் பதில் அளிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, இந்தியா என்றால் குஜராத் மட்டுமா என்றும், தமிழ்நாட்டிற்கு மத்திய அரசால் நடந்து வரும் அநீதி குறித்தும் திமுக பொதுக்கூட்டங்களில் பேசப்பட உள்ளது. திமுக ஆட்சியில் இன்னும் 91 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. ஏனென்றால் அது மத்திய அரசு தொடர்புடையது. இதுதொடர்பாக மத்திய அரசிடம் நேரில் சென்றும், நாடாளுமன்றத்திலும் குரல் கொடுத்துள்ளோம். ஆனாலும் பதில் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications