எகிறிய காங்கிரஸ்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த ஸ்டாலின்.. திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியானது எப்படி?
சென்னை: திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வந்தநிலையில் தற்போது ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது. அதன்படி வரும் தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு 28 + 1 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திமுக - காங்கிரஸ் கூட்டணி நீண்ட இழுபறிக்கு பிறகு உறுதியாகியுள்ளது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையுடன் முஷ்டியை முறுக்கிய காங்கிரஸ் 28 சட்டமன்ற தொகுதிகள் 1 ராஜ்யசபா தொகுதியுடன் திமுக கூட்டணியை உறுதி செய்துள்ளது.

41 தொகுதிகளை கேட்ட காங்கிரஸ்
திமுகவுடன் நீண்ட காலமாக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி, இந்த முறை திமுக தலைமைக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக 41 தொகுதிகளை கேட்டது. திமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் வைத்து இருந்த கூட்டணியை அப்படியே வைத்துள்ள நிலையில், கூடுதலாக மக்கள் நீதி மய்யம், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் இணைந்துள்ளன.
இதனால் 20 கட்சிகளுக்கு மேல் திமுக கூட்டணியில் இருக்கும் நிலையில், இந்த முறை கூடுதல் சீட்டிற்கு வாய்ப்பு இல்லை என்று திமுக கூறியது. ஆனால், காங்கிரசோ கூடுதல் தொகுதி கட்டாயம் வேண்டும் என்று அடம் பிடித்தது. ஒரு கட்டத்தில் திமுக தலைமையோ காங்கிரஸ் போனால் போகட்டும் என்ற முடிவுக்கு வந்தது.
கட்சிக்குள்ளேயே பல்வேறு கருத்துக்கள்
தமிழக காங்கிரஸ் கட்சியில் சில நிர்வாகிகள் தவெகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்று பேசி வந்தனர். மற்றொரு தரப்பு நிர்வாகிகள் திமுகவே நம்பகமான கூட்டணி என்றும் அப்போதுதான் வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்று கூறினர். இதனால், காங்கிரஸ் கட்சிக்குள் இருவேறு கருத்துகள் நிலவியது.
இதனால் திமுக - காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா? இல்லை கூட்டணி முறிவு ஏற்படுமா? என்பது கடந்த ஒருவார காலமாக தமிழக அரசியல் வட்டார்த்தில் பரபரப்பு நிலவியது. தாங்கள் விரும்பிய தொகுதிகளை கேட்டு காங்கிரஸ் அழுத்தம் கொடுத்து வந்ததால் தொகுதி உடன்பாடு எட்டுவதில் இழுபறி நீடித்தது. நேற்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்து பேசினார்கள்.
அதிகபட்சம் 25 தொகுதிகள் தான்
தொகுதி பங்கீட்டில் நீடித்து வரும் சிக்கலுக்கு முற்றுப்புள்ளிவைக்கும் வகையில் இந்த ஆலோசனையின் போது பல்வேறு கருத்துக்கள் பேசப்பட்டன. அப்போது ஸ்டாலின் கூடுதல் தொகுதிக்கு நோ சான்ஸ் என்று சொல்லியதாக கூறப்படுகிறது.
கூடுதல் தொகுதிக்கு வாய்ப்பு இல்லை.. அதிகபட்சம் 25 தொகுதிகள் தரலாம் என்று ஸ்டாலின் சொல்லியதாக கூறப்படுகிறது. இந்த தகவலை உடனடியாக டெல்லி மேலிடத்தில் ப.சிதம்பரமும் தெரிவித்தார். திமுக - காங்கிரஸ் என்பது இயற்கையான கூட்டணி, எனவே திமுகவுடன் செல்வதே அனுசரனையான இருக்கும் என்று தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்களும் டெல்லி தலைமையிடம் அறிவுறுத்தினார்களாம்.
3 தொகுதிகளை கூடுதலாக
இதையடுத்தே, 28 தொகுதிகளுடன் கூட்டணி உறுதி செய்துள்ளது. 41 தொகுதிகள் என்று எகிறிய காங்கிரசை, திமுக தனது வழக்கமான பாணியில் ஹேண்டில் செய்து கூட்டணிக்குள் தக்க வைத்துள்ளது. கடந்த 2021 தேர்தலில் 25 காங்கிரஸ் போட்டியிட்டது.. இந்த முறை அதை விட கூடுதலாக 3 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது.












Click it and Unblock the Notifications