எத்தனை தொகுதிகள் வேண்டும் சொல்லுங்க.. கூட்டணி கட்சிகளுடன் பேச குழு அமைத்த திமுக
சென்னை:லோக்சபா தேர்தலையொட்டி திமுகவில் மற்ற கட்சிகளுடன், தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும், அறிக்கை தயாரிக்கவும் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மற்ற மாநிலங்களை போலவே... தமிழகத்திலும் லோக்சபா தேர்தலை எதிர் கொள்ளும் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. அதிமுக ஓரணியிலும், எதிர்க்கட்சியான திமுக ஓரணியாகவும் அணி திரள்கின்றன. திமுகவுக்கு காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இஸ்லாமிய அமைப்புகள் உள்ளிட்டவை ஆதரவு தெரிவித்துள்ளன.
அதிமுகவின் நிலையோ.. மதில்மேல் பூனையாக உள்ளது. யாருடனாவது கூட்டணியா?இல்லை தனித்தே போட்டியா என்பது தெரியாமல் ஒவ்வொருவரும் மாற்றி மாற்றி கருத்துகளை கூறி வருகின்றனர். பாஜகவுடன் இணைந்து அதிமுக தேர்தலை சந்திக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் ஒரு சாரார் கருத்துகளை கூறி வருகின்றனர்.
இந் நிலையில், லோக்சபா தேர்தலையொட்டி திமுகவில் மற்ற கட்சிகளுடன், தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும், அறிக்கை தயாரிக்கவும் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதன்வழியாக.. தமது அடுத்த கட்ட தேர்தல் நடவடிக்கையை திமுக தீவிரப் படுத்தி உள்ளது. இதுகுறித்து, தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:லோக்சபா தேர்தலில் தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக திமுக பொருளாளர் துரைமுருகன் தலைமையில் 6பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
குழு உறுப்பினர்களாக இ.பெரியசாமி, ஆர்.எஸ்.பாரதி, கே.என்.நேரு, க.பொன்முடி, எ.வ.வேலு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதே போன்று லோக்சபா தேர்தல் அறிக்கை தயாரிக்க 8பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்த குழுவில், டி.ஆர்.பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி, கனிமொழி, திருச்சி சிவா, ஆ.ராசா, டி.கே.எஸ்.இளங்கோவன், ராமசாமி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.