திமுக - கம்யூனிஸ்ட் சீட் பங்கீடு உறுதியானது.. ஒப்பந்தம் கையெழுத்து இப்போது இல்லை.. இதுதான் காரணம்!
சென்னை: லோக்சபா தேர்தல் சீட் பங்கீடு தொடர்பாக இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தொகுதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. மார்ச் 3ஆம் தேதிக்கு பிறகு தொகுதிப்பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என பேச்சுவார்த்தைக்குப் பிறகு சிபிஐ கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுக கூட்டணியில், காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், கொமதேக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கூட்டணி கட்சிகளுக்கான முதற்கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை அண்மையில் நடைபெற்றது.

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு: இதனைத் தொடர்ந்து தொகுதி பங்கீடு தொடர்பான 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த கூட்டணி கட்சிகளுக்கு திமுக அழைப்பு விடுத்தது. அதன்படி நேற்று முன்தினம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த தொகுதி பங்கீடு தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக, கொமதேக ஆகிய கட்சிகள் பங்கேற்றன.
இந்திய யூனியன் முஸ்லில் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அக்கட்சியின் சார்பில் நவாஸ்கனி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அக்கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், மதிமுக உடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
நேற்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சிபிஎம் கட்சி 3 சீட்களை கேட்டதாகவும், 2 சீட் தான் என திமுக உறுதியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. உடன்பாடு எட்டப்படாத நிலையில், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவோம் எனக் கூறிவிட்டு கிளம்பினர் சிபிஐஎம் கட்சியினர்.
எண்ணிக்கை ஓகே! எந்தெந்த தொகுதி?: அதைத்தொடர்ந்து, இன்று காலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொகுதிப் பங்கீட்டு குழுவினர், அண்ணா அறிவாலயத்தில் திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தினர். சிபிஐ எம்.பி சுப்பராயன் உள்ளிட்டோர் திமுக குழுவினருடன் இன்று இரண்டாம் கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையின்போது, திமுக - சிபிஐ இடையே கிட்டத்தட்ட சீட் எண்ணிக்கை உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எனினும் எந்தெந்த தொகுதி என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. மற்ற கட்சிகளுடனும் தொகுதிகளை பங்கிட வேண்டி இருப்பதால், தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தை பிறகு மேற்கொள்ளலாம் என முடிவெடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மிக மிக சுமூகமாக: இந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சிபிஐ எம்.பி சுப்பராயன், "40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்பதே கள நிலவரம். அதன் அடிப்படையில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்தப் பேச்சுவார்த்தை மிக மிக சுமுகமாக நடைபெற்றது. திருப்தி அளிக்கும் வகையில் பேச்சுவார்த்தை நடந்தது.
ஆனால், தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம், மார்ச் 3ஆம் தேதிக்கு மேல் மேற்கொள்ளப்படும். மீண்டும் அவர்கள் அழைக்கும்போது, இறுதிப் பட்டியல் உறுதி செய்யப்பட்டு, தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவோம்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications