அஜித் குமார் விவகாரம்.. காவலர்கள் கைது முதல் சகோதரருக்கு அரசுப் பணி வரை.. ஒரே நாளில் சமாளித்த திமுக!
சென்னை: திருப்புவனம் இளைஞர் அஜித் குமாரின் லாக் அப் மரண விவகாரத்தை திமுகவுக்கு எதிராக திருப்பும் வாய்ப்பை அதிமுக கோட்டைவிட்டுவிட்டதாக பார்க்கப்படுகிறது. அஜித் குமாரின் மரணத்திற்கு காரணமான 5 தனிப்படை காவலர்கள் கைது தொடங்கி அஜித் குமாரின் சகோதரர் நவீன் குமாருக்கு அரசு வேலை கொடுத்தது வரை ஒரே நாளில் திமுக பிரச்சனையை சமாளித்துள்ளது. அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த விவகாரத்தில் திமுக சூழலை எப்படி கட்டுக்குள் கொண்டு வந்தது என்பதை பார்க்கலாம்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த இளைஞர் அஜித் குமார், திருட்டு வழக்கு விசாரணையின் போது காவல்துறையினரின் கொடூரமான தாக்குதலால் உயிரிழந்தார். நள்ளிரவில் அஜித் குமார் உயிரிழந்த சம்பவம் அறிந்து, அவரது உறவினர்கள் அனைவரும் திருப்புவனம் காவல் நிலையம் முன்பு குவிந்தனர்.

குடும்பத்தினர் முற்றுகை
அடுத்த நாள் மதுரை மருத்துவமனையிலும் இந்த போராட்டம் தொடர்ந்தது. இறுதியாக மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தப்பட்டு, குடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளில் நடக்கும் 24வது லாக் அப் மரணம் இதுவாகும். இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். அதேபோல் பொதுமக்களிடையே மிகப்பெரிய பேசுபொருளானது.
போலீசாரின் அத்துமீறல்கள்
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே இருக்கும் நிலையில், திமுகவுக்கு மிகப்பெரிய தலைவலியை கொடுக்கும் சம்பவமாக பார்க்கப்பட்டது. ஏனென்றால் கடந்த சில நாட்களாகவே காவல் நிலையங்களில் நடக்கும் அத்துமீறல்கள் மக்கள் மத்தியில் பேசப்பட்டு கொண்டே இருந்தன. கர்ப்பிணியை போலீசார் தாக்கியது, ஏடிஜிபி ஜெயராம் விவகாரம் என்று காவல்துறையின் அத்துமீறல்கள் அரங்கேறி வந்தன.
எதிர்க்கட்சிகள் தாமதம்
முதல்வர் ஸ்டாலின் கையில் இருக்கும் துறை என்பதால், நேரடியாக ஸ்டாலினை நோக்கியே கேள்விகள் எழுந்தன. ஆனால் அஜித் குமார் மரண வழக்கில் அதிமுகவினர் கண்டன அறிக்கையோடு நிறுத்தியது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் செய்த தாமதத்தை பயன்படுத்தி திமுக ஒரே நாளில் அத்தனை விஷயங்களையும் மாற்றி இருக்கிறது.
தனிப்படை காவலர்கள் கைது
நேற்று முன்தினம் தனிப்படை காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், உடனடியாக காலையில் எஸ்பி ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அதுமட்டுமல்லாமல் டிஎஸ்பி சண்முகசுந்தரமும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனிடையே காவலர்கள் 5 பேரையும் கைது செய்து, கொலை வழக்காகவும் பதிவு செய்யப்பட்டது.
ஒரே நாளில் நடவடிக்கை
அதேபோல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்த போதே உடனடியாக சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி ஸ்டாலின் உத்தரவிட்டார். இவையனைத்தும் நேற்று ஸ்டாலின் செய்தியாளர்களை சந்திப்பதற்கு முன்பாக நடத்தி முடிக்கப்பட்டது. அதன்பின் மாலையில் தமிழக அரசு தரப்பில் அமைச்சர் பெரியகருப்பன் நேரடியாக சென்று ஆறுதல் கூறியதோடு, முதல்வர் ஸ்டாலினும் செல்ஃபோன் மூலமாக ஆறுதல் தெரிவித்தார்.
அரசு வேலை
அப்போது குடும்பத்தினர் சார்பாக 2 கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அந்த 2 கோரிக்கையில் முதல் கோரிக்கையான நீதி விசாரணையை உடனடியாக நிறைவேற்றும் விதமாக, வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டார். அதேபோல் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைக்கு ஏற்பாடு செய்வதாக கூறி, இன்று காலை அதற்கான நியமன சான்றிதழை நேரடியாக சென்று வழங்கிவிட்டார்கள்.
எதிர்க்கட்சிகள் தவறவிட்டது எங்கே?
இன்று அதிமுக மற்றும் பாஜக தரப்பில் திருப்புவனத்தில் போராட்டம் நடத்தப்படுவதற்கு முன்பாகவே திமுக இத்தனை பணிகளையும் செய்து முடித்திருப்பது சூழலை ஆளுங்கட்சியின் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக பார்க்கப்படுகிறது. ஜூன் 29ஆம் தேதியன்றே விவகாரம் பெரிதான நிலையில், ஜூன் 30ஆம் தேதியன்று மதுரை மாவட்ட அதிமுக நேரில் சென்று குடும்பத்தினரை சந்தித்திருக்க வேண்டும்.
திமுக என்ன செய்திருக்கும்?
எதிர்க்கட்சியாக இருந்த போது திமுக எந்த பிரச்சனையாக இருந்தாலும் உடனே கையில் எடுத்து குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதோடு, மாவட்ட தலைநகரங்களில் போராட்டங்களை அறிவிக்கும். அதுமட்டுமல்லாமல் அஜித் குமார் விவகாரம் நடந்து 3 நாட்களுக்கு பிறகும் கூட எந்தக் கட்சியும் போராட்டத்தை நடத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications