மாநிலங்களவை தேர்தல்.. வைகோவுக்கு மீண்டும் வாய்ப்பில்லை.. சொன்னபடி மநீம கட்சிக்கு கொடுத்த திமுக!
சென்னை: மாநிலங்களவை தேர்தலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு மீண்டும் திமுக தரப்பில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. 2019ஆம் ஆண்டு திமுக தரப்பில் வைகோவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதனால் மதிமுக பொதுச்செயலாளர் மற்றும் சீனியர் என்ற அடிப்படையில் வைகோவுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்று எதிர்பார்க்கப்பட்டது. மநீம கட்சிக்கு அளித்த உறுதி காரணமாக, கமல்ஹாசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், வரும் ஜூன் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. மாநிலங்களவையில் உள்ள பாமகவின் அன்புமணி ராமதாஸ், திமுகவின் எம்.சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், அதிமுகவின் என்.சந்திரசேகரன், மதிமுகவின் வைகோ ஆகியோரின் பதவிக் காலம் ஜூன் 24ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.

இந்த நிலையில் மாநிலங்களவைத் தேர்தல் ஜூன் 19ஆம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஜூன் 9ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கும் என்றும், வேட்புமனுவைத் திரும்பப் பெற ஜூன் 12ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. இதில் திமுக தரப்பில் வைகோவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதற்கான விருப்பத்தையும் அண்மையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளிப்படுத்தி இருந்தார். இந்த நிலையில் மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பி.வில்சனுக்கு மட்டும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன்பின் கவிஞர் சல்மா மற்றும் சேலத்தைச் சேர்ந்த எஸ்.ஆர்.சிவலிங்கத்திற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஏற்கனவே மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு உறுதி அளித்தபடி, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுக உடனான ஒப்பந்தப்படி ஒரு மக்களவைத் தொகுதியும், வைகோவுக்கு மாநிலங்களவை இடமும் ஒதுக்க திமுக ஒப்புக் கொண்டது.
அதன்படி திமுக வைகோவை மாநிலங்களவைக்கு தேர்வு செய்து அனுப்பியது. ஏற்கனவே 1978 மற்றும் 1996 ஆகிய ஆண்டுகளில் மாநிலங்களவை உறுப்பினரான வைகோ பணியாற்றி உள்ளார். தற்போது 3வது முறையாக அவர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். இதன் மூலம் அவரின் நாடாளுமன்ற பயணம் முடிவுக்கு வருவதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications