நெருங்கும் தேர்தல்.. ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. துரைமுருகன் அறிவிப்பு!
சென்னை: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை மறுநாள் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை மறுநாள் (பிப்ரவரி 23ஆம் தேதி) காலை 11.30 மணியளவில் நடைபெறும் என திமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டமானது காணொளிக் காட்சி வாயிலாக நடைபெறும் எனவும், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறும் எனவும், லோக்சபா தேர்தல் தொடர்பாக இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் 72 பேரும், நாடாளுமன்றத் தொகுதி பார்வையாளர்களும், அனைத்து அமைச்சர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 3 சிறப்புக் குழுக்களை அமைத்தது திமுக. தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும்; தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும், தேர்தல் அறிக்கை தயாரிக்கவும் 3 குழுக்களை அமைத்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டார்.
அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் அமைக்கப்பட்ட தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்புக் குழுவில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் அண்மையில் அண்ணா அறிவாலயத்தில் கூடி ஆலோசித்தனர்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான 'தேர்தல் அறிக்கை தயாரிப்பு' குழு, கனிமொழி கருணாநிதி எம்.பி தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில், டி.கே.எஸ்.இளங்கோவன், ஏ.கே.எஸ்.விஜயன், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா, கோவி.செழியன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ, எம்.எம்.அப்துல்லா எம்.பி, மருத்துவர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ, மேயர் பிரியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அதேபோல, திமுக தொகுதி பங்கீட்டு குழுவில், டி.ஆர்.பாலு தலைமையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எம்ஆர்கே பன்னீர்செல்வம், துணை பொதுச்செயலாளர் பொன்முடி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா எம்.பி, கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்.பி, ஆகியோர் உள்ளனர். இவர்கள் தான் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications