ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.. காணொளிக் காட்சி வாயிலாக ஆலோசனை!
சென்னை: முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. காணொலி வாயிலாக நடைபெற்று வரும் இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற திமுக இலக்கு நிர்ணையித்துள்ள நிலையில், இது தொடர்பாக வியூகம் வகுக்கும் வகையில் முக்கிய ஆலோசனை நடைபெற்று வருகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியுள்ளது. இதனால், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தற்போதே முடுக்கிவிட்டுள்ளன. குறிப்பாக தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள திமுக தனது தேர்தல் பணிகளை கடந்த சில மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டது. கடந்த வாரம் முதல்வரும் திமுக தலைவருமான முக ஸ்டாலின் ஒன் டூ ஒன் நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சட்டமன்ற தொகுதிகளை நான்கு பிரிவுகளாக வைத்துள்ளோம். அடர் பச்சை, இளம் பச்சை, ஆரஞ்சு, சிவப்பு என்ற வகையில் தொகுதிகளை வரிசைப்படுத்தி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். 200 தொகுதிகளுக்கு மேல் வெல்ல வேண்டும் என்று இலக்கு நிர்ணையித்துள்ள ஸ்டாலின் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
அதேபோல, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பயணித்து வரும் மு.க. ஸ்டாலின் மக்களை நேரடியாக சந்திக்கும் வகையில் ரோடு ஷோ நடத்தி வருகிறார். இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அணிச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
"ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை" குறித்து, கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அணிச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டம், இன்று சனிக்கிழமை மாலை 6 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக நடைபெறும். அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
மாவட்ட செயலாளர்களுடனான இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது, தேர்தல் பணிகளை முடுக்கி விடுவது உள்ளிட்டவை குறித்து மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்துவார் என்று தெரிகிறது. மேலும், திமுகவிற்கு சவாலாக உள்ள தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான யுக்திகள் வகுப்பது குறித்தும், மக்கள் நல பணிகளை செய்து மக்களிடம் கட்சிக்கு நன்மதிப்பை ஏற்படுத்துவதற்கான பணிகளில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications