அதிமுகவுக்கு போட்டி.. அதே நாளில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! முக்கிய முடிவெடுக்கும் ஸ்டாலின்!
சென்னை: வரும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 16-08-2024 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி அளவில், சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும். அதுபோது திமுக மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திமுக முப்பெரும் விழா குறித்து ஆலோசனை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. செப்டம்பர் 15 பேரறிஞர் அண்ணா பிறந்தநாள், செப்டம்பர் 17 பெரியார் பிறந்தநாள். அதே செப்டம்பர் 17 ஆம் தேதி 1949 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட நாள். இதனை ஒவ்வொரு ஆண்டும் முப்பெரும் விழாவாக திமுக கொண்டாடுவது வழக்கம்.
அந்தவகையில் திமுக முப்பெரும் விழா அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ளது. திமுக முப்பெரும் விழாவை திமுக தொண்டர்களின் உணர்வோடும், உயிரோடும் கலந்த நிகழ்வாகப் பார்க்கின்றனர். இந்த முப்பெரும் விழாவை எங்கு நடத்துவது என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுத்து அறிக்க இந்த மா.செக்கள் கூட்டம் நடைபெற உள்ளதாகத் தெரிகிறது.

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் அதே நாளில் அதிமுக அவசர செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் 16 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை கழக எம்.ஜி.ஆர் மாளிகையில் அவைத் தலைவர் அ. தமிழ்மகன் உசேன் தலைமையில் அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications