கூட்டுறவு சங்கங்களில் முக்கிய பொறுப்பு! சீட் கிடைக்காதவர்களிடம் சமாதானம் பேசும் திமுக மா.செ.க்கள்!
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சீட் கிடைக்காத பலரும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்த தொடங்கியிருப்பதால், அவர்களை அழைத்துப் பேசி சமாதானம் செய்து வருகிறார்கள் திமுக மாவட்டச் செயலாளர்கள்.
விரைவில் கூட்டுறவு சங்கத் தேர்தல் மூலம் முக்கியப் பொறுப்புகள் கொடுக்கப்படும் என சமாதான உறுதிமொழிகள் கொடுக்கப்படுகிறதாம்.
கோவை, தென்காசி, என பல மாவட்டங்களில் எனக்கு ஏன் சீட் வழங்கவில்லை எனக் கேட்டு முற்றுகைப் போராட்டங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

நகர்ப்புற உள்ளாட்சி
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை திமுக அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. இதுவரை மூன்று கட்டங்களாக வேட்பாளர்கள் பட்டியல் வெளிவந்துள்ளன. இந்நிலையில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியான பல இடங்களில் சீட் கிடைக்காதவர்கள் அதிருப்தியில் இருப்பதை அறிந்து அவர்களை அழைத்து சமாதானம் பேசும் மாவட்டச் செயலாளர்கள், விரைவில் கூட்டுறவு சங்கத் தேர்தலில் முக்கிய பொறுப்பு கொடுக்கப்படும் என உறுதி தருகிறார்களாம்.

கூட்டணிப் பங்கீடு
சீட் கிடைக்கவில்லை என ஒரு தரப்பில் அதிருப்தியை வெளிப்படுத்தும் நிலையில் மற்றொரு தரப்பில் கூட்டணிக் கட்சிக்கு எதற்கு எங்கள் வார்டை கொடுத்தீர்கள் என மாவட்டச் செயலாளர்களை கீழ்மட்ட நிர்வாகிகள் குடைந்து எடுக்கிறார்களாம். அவர்களிடம் இடப்பங்கீடு விவரத்தை எடுத்துச் சொல்லி புரிய வைப்பதற்குள் அமைச்சர்களுக்கு போதும் போதும் என்றாகிவிடுகிறதாம்.

சுமூகமான நிலை
சீனியர் அமைச்சர்களின் மாவட்டங்களில் மட்டும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாகவோ, கூட்டணிப் பங்கீடு குறித்தோ எந்த சலசலப்பும் ஏற்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. திருச்சி, திருவண்ணாமலை, சேலம், விழுப்புரம், திண்டுக்கல், கடலூர், வேலூர், உள்ளிட்ட மாவட்டங்களை தவிர மற்ற இடங்களில் எல்லாம் அந்தந்த மாவட்டச் செயலாளர்களுக்கும், அமைச்சர்களுக்கும் தலைவலி தானாம். சிவகங்கை, கன்னியாகுமரி, மாவட்டங்களில் திமுக -காங்கிரஸ் பேச்சுவார்த்தை கசப்புடன் இருக்கிறதாம்.

கூட்டுறவு சங்கம்
அண்மையில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட கூட்டுறவு சங்க சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் கொடுத்துவிட்டால், தற்போது இருக்கும் அதிமுகவினரின் பதவிக்காலம் முடிவுக்கு வந்துவிடும். அதைத் தொடர்ந்து விரைவில் கூட்டுறவு சங்கங்களுக்கும் தேர்தல் நடைபெறக் கூடும் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications