தேமுதிக போட்டியிடும் 10 தொகுதிகள் இறுதியானது.. திமுக தலைமையகத்தில் சுதீஷ் சொன்ன சேதி!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் குறித்த பேச்சுவார்த்தை இன்றும் தொடர்ந்தது. இந்நிலையில் தொகுதிப் பங்கீடு சுமூகமாக முடிவடைந்துள்ளது. இன்று மாலை தொகுதிகள் விவரங்களை அறிவிக்க உள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நாள் நெருங்குவதால் அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தத் தேர்தலில் திமுக, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி, சசிகலா - ராமதாஸ் கூட்டணி என 5 முனைப் போட்டி நிலவுகிறது.

2026 சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக கடந்த பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி இணைந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 3 ஆம் தேதி தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கியது திமுக. இதையடுத்து, தேமுதிகவின் பொருளாளர் எல்.கே. சுதீஷ், மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், சட்டசபை தேர்தலில் தேமுதிகவுக்கு 10 சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் கட்சிகளுக்கு தொகுதி எண்ணிக்கை பங்கீடு நிறைவடைந்து தற்போது கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்கிற பங்கீடு நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று மாலை தொகுதிகள் பங்கீடு இறுதி செய்யப்பட்டு முதல்வர் ஸ்டாலின் கட்சி வாரியாக போட்டியிடும் தொகுதிகளை அறிவிக்க உள்ளார்.
கடந்த 26 ஆம் தேதி தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா அறிவாலயத்திற்கு வந்தார். அப்போது தங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய 10 தொகுதிகள் தொடர்பான பட்டியலை அவர் டி.ஆர் பாலுவிடம் அவர் கொடுத்தார். அந்த பட்டியலில் கும்மிடிப்பூண்டி, விருகம்பாக்கம், பல்லாவரம், கே.வி.குப்பம் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை, விருத்தாசலம், கடலூர், நெய்வேலி, சேலம் தெற்கு, சிங்காநல்லூர், கோவை வடக்கு, மதுரை மத்தி, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், சாத்தூர், விருதுநகர், சிவகாசி ஆகிய தொகுதிகள் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.
விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதியில் போட்டியிட விரும்பும் நிலையில், பிரேமலதா ரிஷிவந்தியம் அல்லது விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளார். பிரேமலதா விஜயகாந்த், தனது கணவர் விஜயகாந்த் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதிகளான விருத்தாசலம் அல்லது ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் தலைமையிலான குழுவினர் அண்ணா அறிவாலயத்தில் திமுக குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இன்று மாலை, தேமுதிக போட்டியிடும் தொகுதிகளை அறிவிக்க உள்ளார் ஸ்டாலின்.
திமுக கூட்டணியில் விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் முடிவாகி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இன்று மாலை, இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தேமுதிக பொருளாளர் சுதீஷ், திமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிடும் 10 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன என்றும் இன்று கடைசி கட்டமாக நடைபெற்ற தொகுதிகள் பங்கீடு சுமூகமாக முடிந்தது என்றும் தொகுதி விவரங்களை இன்று மாலை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications