திமுக இரட்டை நிலைப்பாடு.. ஒருபக்கம் வாழ்த்து, மறுபக்கம் ஆப்பு.. இதுதான் அரசியல்!
சென்னை: தமிழக அரசியல் களத்தில் ஆட்சி அமைப்பது குறித்த இழுபறி நீடித்து வரும் வேளையில், ஆளுங்கட்சியான திமுகவின் நடவடிக்கைகள் மற்றும் அக்கட்சித் தலைவர்களின் முரண்பட்ட கருத்துக்கள் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. ஒருபுறம் ஜனநாயக மாண்பைக் காப்பதாகக் கூறிக்கொண்டு, மறுபுறம் கூட்டணிக் கட்சிகள் மீதான தாக்குதல்களை அரங்கேற்றுவது திமுகவின் 'இரட்டை வேடத்தை' அம்பலப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் சாடுகின்றனர்.
தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய சூழலில், திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், "மக்களின் தீர்ப்பை மதிக்கிறோம்; திமுக ஒரு பொறுப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்" என்று தெரிவித்தார். மேலும், தவெக நிலையான ஆட்சி அமைக்கத் தனது கூட்டணிக் கட்சிகள் ஆதரவு அளிப்பதில் தங்களுக்குத் தயக்கமில்லை என்பது போன்ற ஒரு பிம்பத்தை திமுக தலைமை உருவாக்கி வந்தது. ஆனால், கள நிலவரம் இதற்கு நேர்மாறாக இருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

காங்கிரஸ் தொண்டர்கள் மீது தாக்குதல்
காங்கிரஸ் கட்சி தவெகவுடன் கைகோர்த்ததைச் சகித்துக்கொள்ள முடியாத திமுகவினர், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் தொண்டர்களைச் சாலைகளில் விரட்டி விரட்டித் தாக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுமட்டுமன்றி, சமூக வலைத்தளங்களில் திமுக ஆதரவாளர்கள் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகளைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். திமுகவின் செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் சரவணன் ஒரு பேட்டியில், "காங்கிரஸ் கட்சி திமுகவின் முதுகில் குத்திவிட்டது" என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
பத்திரிக்கையாளர் மணி
இந்த முரண்பட்ட போக்கு குறித்து மூத்த பத்திரிகையாளர் மணி தனது சமீபத்திய பேட்டியில் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். "திமுக எப்போதுமே இப்படித்தான் இரட்டை வேடம் போடும். வெளியே நாகரிகமாகப் பேசுவது போலக் காட்டிவிட்டு, உள்ளுக்குள் கூட்டணிக் கட்சிகளைச் சிதைக்கும் வேலையைச் செய்கிறார்கள்" என்று அவர் விமர்சித்துள்ளார்.
திமுக ஒரு சிறப்பான நாகரீகமான கட்சி என்ற பெயரை பெற விரும்புகிறது. ஆனால், மறுபக்கம் வேறு வகை வேலைகளில் ஈடுபடுவது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஒருபுறம் வாழ்த்துச் சொல்லிவிட்டு, மறுபுறம் தனது ஆட்களை கொம்பு சீவி விடுவது முறையான அரசியல் நாகரிகமா என்ற கேள்வி தற்போது வலுவாக எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications