அதிமுகவில் இணைந்தார் டாக்டர் சரவணன்..மதிமுக, பாஜக, திமுக,பாஜக,அதிமுக.. தொடரும் அரசியல் பயணம்
சென்னை: பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் எம்எல்ஏ சரவணன் இன்று அதிமுகவில் இணைந்துள்ளார். இன்று அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். மதிமுக, பாஜக, திமுக, பாஜக என மாறி மாறி பயணம் செய்த சரவணன் இன்று அதிமுகவில் ஐக்கியமாகியுள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு மதுரை புறநகர் மாவட்ட மதிமுக செயலாளராக இருந்த டாக்டர் சரவணன் திடீரென அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இது குறித்த ராஜினாமா கடிதத்தையும் வைகோவிற்கு அனுப்பி வைத்தார். வைகோ நல்ல தலைவராக இருக்கிறார். ஆனால், கூட்டணி குறித்து முடிவு எடுப்பதில் தடுமாறுகிறார். தன்னிச்சையான முடிவு எடுக்கிறார். இதனால்தான் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் விலகல் முடிவை எடுத்தனர் என்று கூறினார்.

அதன்பிறகு 2016ல் மு க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். திமுகவின் மருத்துவ அணியின் துணை தலைவராக செயல்பட்டு வந்தார். 2017ல் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்த தேர்தலில் அதிமுகவின் ஏகே போஸ் வெற்றி பெற்றார். ஆனால் அவர் காலமானதால் மீண்டும் 2019ல் தேர்தல் நடந்தது. இதில் திமுக சார்பில் போட்டியிட்டு டாக்டர் சரவணன் வெற்றி பெற்றார். திருப்பரங்குன்றம் தொகுதியை அதிமுக கண்டுக்கொள்ளாததால் அதன்பிறகு அவர் தனது சொந்த நிதியை செலவழித்து திருப்பரங்குன்றம் தொகுதியில் நலத்திட்டங்களை செய்தார். குறிப்பாக கொரோனா சமயத்தில் உதவிகள் செய்தார்.
இந்நிலையில் தான் கடந்த 2021ஆம் ஆண்டு தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதி திமுகவின் கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் சரவணனுக்கு அந்த தொகுதியில் சீட் மறுக்கப்பட்டது. இதனால் அவர் கடும் அதிருப்தி அடைந்தார். இதையடுத்து சட்டசபை தேர்தலுக்கு முன்பாக திமுகவில் இருந்து விலகிய அவர் மீண்டும் பாஜகவில் இணைந்தார். கட்சியில் இணைந்த அடுத்த சில மணிநேரத்தில் மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட டாக்டர் சரவணனுக்கு பாஜகவில் சீட் வழங்கப்பட்டது. இருப்பினும் தேர்தலில் அவர் தோல்வியடைந்தார்.

அதன்பிறகு கட்சி பணிகளில் கவனம் செலுத்தி வந்தார். காஷ்மீரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர் லெட்சுமணனின் உடல் கடந்த ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி மதுரை விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. அப்போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்த வந்த போது பாஜகவினருடன் மோதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கிருந்து பாஜகவினரை வெளியேற்ற உத்தரவிட்டதால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அப்போது பாஜகவினர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்து திரும்பிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் காலணியை வீசினர்.
இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் அன்று இரவு அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை அவரது இல்லத்தில் சந்தித்து வருத்தம் தெரிவித்தார். இதனையடுத்து பாஜகவில் இருந்தும் நீக்கப்பட்டார்.

இதனை அடுத்து திமுகவில் சரவணன் சேரப் போவதாக அடுத்தடுத்து யூகங்கள் பரவின. மேலும் மதுரையில் பிரம்மாண்ட மாநாடு ஒன்றை நடத்தி சில பாஜக முக்கிய தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் டாக்டர் சரவணன் திமுகவில் இணைவார் என கூறப்பட்டது. அதற்கேற்றார் போல் சில பாஜக நிர்வாகிகளும் திமுகவில் இணைந்தனர். அதே நேரத்தில் சொன்னது போல திமுகவில் மாநாடு அல்லது அதிகாரப்பூர்வ இணைப்பு போன்ற நிகழ்வுகள் ஏதும் நடைபெறவில்லை.
பாஜகவில் இருந்து விலகிய பின்னர் கடந்த 5 மாத காலமாக அமைதி காத்து வந்தார் சரவணன். அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் அணியில் டாக்டர் சரவணன் இணைந்து விட்டதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின. அதுகுறித்து அதிகாரப்பூர்வமாக சரவணன் எதுவும் பேட்டி அளிக்கவில்லை. இந்த நிலையில் இன்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்த டாக்டர் சரவணன் பூங்கொத்து கொடுத்து தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார்.












Click it and Unblock the Notifications