"வார்ரே வா".. கடப்பாறையுடன் கிளம்பிய அதிமுகவினர்.. அறிவாலயத்தில் தஞ்சமடைந்த லட்சுமணன்!
லட்சுமணன் திமுகவில் சேர்ந்துள்ளதால் அதிமுக தரப்பு டென்ஷன் ஆகியுள்ளது
சென்னை: ஸ்டாலினுக்கு ஒரே ஒரு போன் போட்டார் லட்சுமணன்... இன்று விழுப்புரம் அதிமுகவே கதற ஆரம்பித்துள்ளது.. எப்படியும் அமைச்சர் சிவி சண்முகத்துக்கு ஒரு குடைச்சல் அறிவாலயத்தில் இருந்து இனி வர போகிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்!
அதிமுக முன்னாள் எம்பி லட்சுமணன் திமுகவுக்கு வந்துள்ளார்.. சிவி சண்முகத்திடம் இருந்த விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் பதவியை பிடுங்கி, லட்சுமணனுக்கு வழங்கினார் அன்றைய ஜெயலலிதா.. இதற்கு பிறகு எம்பியாக தேர்வானார்.
இந்த வாய்ப்பை லட்சுமணன் சரியாக பயன்படுத்தி கொண்டார் என்றே சொல்ல வேண்டும்.. யாரெல்லாம் தன்னை பார்க்க வருகிறார்களோ, எல்லாருக்குமே உதவினார்.. மேலும் பழைய கட்சிக்காரர்களை தேடி சென்று, அவர்களை தன்னுடைய ஆதரவாளர்களாகவும் இவர் மாற்றி கொண்டார்.. அதனால் விழுப்புரத்தில் எங்கு திரும்பினாலும் இவரது செல்வாக்கு பரவியது.. இதுதான் சிவி சண்முகத்துக்கு அப்போது எரிச்சலை தந்ததாகவும் சொல்லப்பட்டது.

மாவட்ட செயலாளர்
முதல்வர் பழனிசாமி - ஓபிஎஸ் இணைப்புக்குப் பிறகு சிவி சண்முகம் மாவட்ட செயலாளரானார்.. லட்சுமணன் அமைப்பு செயலாளரானார்.. ஆனாலும், மாவட்ட அளவில் லட்சுமணன் ஓரங்கட்டப்பட்டார்.. இதனால் அப்செட் ஆன லட்சுமணன், கடலூரை போல விழுப்புரம் மாவட்டத்தையும் பிரித்து தன்னை மாவட்ட செயலாளராக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதாவது இருக்கிற 6 தொகுதிகளில் சண்முகம் வேண்டுமென்கிற 3 தொகுதிகளை எடுத்துக்கட்டும், மீதியை பிரித்து அதில் தனக்கு மா.செ. பதவி வழங்கினால் போதும் என்றார்.

அப்செட்
ஆனால் அவர் கோரிக்கையையும், விளக்கத்தையும் கட்சி தலைமை ஏற்கவில்லை.. அதனால் லட்சுமணன் மேலும் அப்செட் ஆனார்.. அதனால் கொஞ்ச காலத்துக்கு ஒதுங்கியே இருந்த நிலையில், திடீரென ஸ்டாலினுக்கு போன் போட்டார்.. கட்சியில் அண்ணா அறிவாலயம் வந்து ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தும் விட்டார்.

சிவி சண்முகம்
இப்போது சிக்கல் என்னவென்றால், அதிமுகவில் இருந்தவரை சிவி சண்முகத்தை சமாளிக்க முடியவில்லை.. இப்போது திமுகவுக்கு வந்திருப்பதால், பொன்முடியை சமாளிப்பாரா என்பதுதான் தெரியவில்லை.. ஆனால், இவர்களுக்குள் இணக்கமான போக்கு கண்டிப்பாக ஏற்படும் என்கிறார்கள் உடன்பிறப்புகள்.. காரணம், லட்சுமணன் ரொம்ப அமைதியானவராம், அதனால் எப்படியும் பொன்முடியிடம் முரண்டுபிடிக்க மாட்டார், அத்துடன் தன்னுடைய ஆதரவாளர்கள் எல்லாரையுமே திமுகவுக்கு கொண்டு வரும் முயற்சியில் இனி இறங்குவார் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.

நம்பிக்கை
அதேபோல, ஸ்டாலினும் லட்சுமணனை சரியாக பயன்படுத்தி கொள்வார் என்றே நம்பிக்கை வெளிப்பட்டுள்ளது.. கடந்த எம்பி தேர்தலின் முடிவில் பொன்முடி மீது கொஞ்சம் அதிருப்தி இருந்த நிலையில், லட்சுமணன் போன்ற சீனியர்களை நிச்சயம் ஸ்டாலின் தனது வெற்றிக்கு வழிகோல செய்வார் என்கிறார்கள்.. திமுகவை பொறுத்தவரை இது ஸ்டாலினின் இன்னொரு வெற்றியாகவும் பார்க்கப்படுகிறது!

டென்ஷன்
"காட்டாற்று வெள்ளம் போல் நடைபெற்று வரும் இந்த ஆட்சியில் நாங்கள் தத்தளிக்க விரும்பவில்லை" என்று லட்சுமணன் சொன்னதுடன், ஸ்டாலினை முதல்வராக்கியே தீருவேன் என்றும் சூளுரைத்துள்ளார்.. அதனால் வரப்போகிற தொகுதியில் விழுப்புரம் ஏகப்பட்ட டென்ஷனுடன் இருக்கும் என்று மட்டும் இப்போதே யூகிக்க முடிகிறது.

வியூகம்
எப்படியும் சிவி சண்முகம், லட்சுமணனின் செல்வாக்கை வீழ்த்தும் நடவடிக்கையில் இறங்குவார் என்கிறார்கள்.. அதற்கான புள்ளி இன்றே அந்த மாவட்டத்தில் தொடங்கியும் விட்டது.. கண்டமங்கலம் ஒன்றியம் சின்னக்குப்பம் என்ற கிராமம் இருக்கிறது.. இங்கு அதிமுகவின் ஒரு கொடிகம்பத்தில் லட்சுமணன் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.

கடப்பாறை
இதை பார்த்ததும், அதிமுகவினர் கடப்பாறையை கொண்டு வந்து, அந்த கல்வெட்டில் இருந்த பெயரை இடித்து, பெயர்த்து எடுத்துவிட்டனர். அநேகமாக இவர்கள் சிவி சண்முகத்தின் ஆதரவாளர்கள் என்றே கூறப்படுகிறது.. அதனால் தமிழகத்தில் மற்ற தொகுதிகளை விட, விழுப்புரம் தொகுதி இப்போது கதகதவென அனல் அடிக்க தொடங்கிவிட்டது!












Click it and Unblock the Notifications