சல்லி சல்லியாக நொறுங்கும் கணக்கு.. கூட்டணியில் கல்லெறியும் கட்சிகள்! ஸ்டாலின் போடப் போகும் அணுகுண்டு
சென்னை: அதிமுக வலுவான கூட்டணி அமைக்க முடியாமல் தவித்து வருகிறது. ஆளும் திமுக வலுவான கூட்டணியை வைத்திருந்தாலும் ஒரு சில அரசியல் கட்சிகள் அடுத்தடுத்து நெருக்கடி கொடுப்பதால் திமுக தலைமை அதிருப்தி அடைந்துள்ளது. அதன் காரணமாகத்தான் கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வரும் என தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான முக ஸ்டாலின் குறிப்பிட்டதாக சொல்கின்றனர் உடன்பிறப்புகள்.
2026 சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் தேர்தல் முன்னேற்பாடுகளை செய்யத் தொடங்கி விட்டன. கடந்த ஆண்டு திமுக தேர்தல் பணிகளை ஆரம்பித்து விட்டது. கேஎன் நேரு, உதயநிதி ஸ்டாலின் தலைமையில் குழு ஒன்றை ஆரம்பித்து தேர்தல் வேலைகளை துவக்கி வைத்தார் திமுக தலைவர் ஸ்டாலின்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தற்போது தேர்தல் வேலைகளை துவக்கி விட்டார். கடந்த வாரம் முதல் ஒவ்வொரு மாவட்டமாக சென்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் கடந்த 2019 தேர்தல் தொடங்கி தற்போது வரை திமுக கூட்டணி தொடர்கிறது.

திமுக தலைமையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மறுமலர்ச்சி திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கழகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இருக்கின்றன. கூடுதலாக சில அமைப்புகளும் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில் 2026 தேர்தலில் கூட்டணி ஆட்சி என்ற முழக்கத்தை பாஜக முன்னெடுத்து இருக்கிறது. அதற்கு எடப்பாடி பழனிச்சாமி மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.
இந்த நிலையில் 2026 தேர்தலில் திமுகவிடம் கூடுதல் சீட்டுகளை கேட்டு பெற வேண்டும் என சில கூட்டணி கட்சிகள் விரும்புகின்றன. முதன் முதலில் விடுதலை சிறுத்தைகள் தான் திமுக கூட்டணியில் கூடுதல் சீட்டுகள் கேட்டது. மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிகழ்ச்சிகளில் துணை முதலமைச்சர் உள்ளிட்ட கோரிக்கைகளையும் காண முடிந்தது. கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளுமே ஒரு வகையில் திமுக தலைமைக்கு மறைமுக நெருக்கடி கொடுத்து வருகிறது.
குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுக அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறது. குறிப்பாக சாம்சங் தொழிலாளர் விவகாரம், அஜித்குமார் மரண வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெளிப்படையாக திமுகவை விமர்சித்தது. மேலும் செல்வப் பெருந்தகை காங்கிரஸ் கமிட்டி தலைவராக வந்த பிறகு அந்த கட்சியிலும் புதிய முழக்கங்களை காண முடிகிறது/ அமைச்சரவையில் பங்கு, கூடுதல் சீட்டுகள் என காங்கிரசும் தங்கள் பங்குக்கு கூறி வருவது திமுக தலைமையை ரசிக்க வைக்கவில்லை.
இதன் காரணமாகத்தான் திமுக கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வரும் என சொன்னாராம் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின். அதாவது கூட்டணியில் இருக்கும் கட்சிகள் கூடுதலாக தொகுதிகளோ அல்லது ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கத்தை எழுப்பினாலோ, அந்தக் கட்சிகளை கழற்றிவிட்டு எதிர் முகாமில் இருக்கும் கட்சிகளை அழைத்து வரவே இந்த ஏற்பாடு என்கின்றனர் விவரம் அறிந்த திமுகவினர்.
தற்போது தொகுதி வாரியாக நிர்வாகிகளை சந்தித்து வருகிற ஸ்டாலின் அதில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் வெற்றி வாய்ப்பு இல்லாத தொகுதிகள் குறித்த ஆய்வு நடத்தி வருகிறார். வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் திமுக நேரடியாக களமிறங்குகிறது. நெருக்கடியான தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு தள்ளிவிட திட்டமிடப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் கூடுதல் சீட்டுகள் கேட்டால் உதயசூரியன் சின்னத்திலேயே நிற்க வேண்டும் என கூட்டணி கட்சிகளை வலியுறுத்தவும் திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கூட்டணி கட்சிகள் அதிருப்தியில் இருக்கின்றனவாம். காலம் மாறினால், காட்சிகளும் மாறலாம் என்கின்றனர் திமுகவினர்.












Click it and Unblock the Notifications