அண்ணா பேச்சு.. குற்றால அருவி.. கொஞ்சு தமிழ்ச் சிந்து! இந்தியின் பிடரியை பிடித்து உலுப்பிய வரலாறு!
சென்னை: அண்ணாவின் 114வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், அரசின் வரவு செலவுத் திட்டத்தில் இந்தி மொழி ஆதிக்கத்திற்காக பணம் செலவழிக்கக் கூடாது என்று முதல் தீர்மானம் போட்டவர் அண்ணா என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இந்தியின் பிடரியை பிடித்து உலுப்பும் வகையில் அவர் ஆற்றிய காரியங்கள் ஏராளம்.
இது தொடர்பான ஒரு சிறிய வரலாற்றுத் தொகுப்பை இங்கே பார்க்கலாம்..

இந்தி ஆதிக்க எதிர்ப்பு
நீதிக்கட்சியின் உதவியோடு சென்னை மாநிலத்தில் முதலமைச்சராக ஆட்சி நடத்திய டாக்டர் சுப்பராயன் 1938-ல் ராஜாஜி மந்திரி சபையில் கல்வி அமைச்சராக இருந்தார். அவரது அறையில் தான் 1938 பிப்ரவரி 25 ஆம் நாள் தமிழ்நாட்டில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்க வேண்டுமென்ற முடிவு எடுக்கப்பட்டது. அடுத்த இரண்டு நாட்களுக்கெல்லாம் பிப்ரவரி 27-ல் காஞ்சிபுரத்தில் கான்பகதூர் கலிபுல்லா சாகிப் எம்.எல்.ஏ தமிழகத்தில் இந்தி ஆதிக்க எதிர்ப்பிற்கான கொடி உயர்த்தினார்.

அண்ணாதுரை
இந்த மாநாட்டில்தான் சோமசுந்தர பாரதியார் இந்தி ஆதிக்கத்தை எதிர்த்துக் குரல் கொடுத்தார். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் படத்தைப் பெரியார் திறந்து வைத்ததும் இந்த மாநாட்டில்தான். 'பொதுமக்கள் பணத்தைக் கொண்ட அரசின் வரவு செலவுத் திட்டத்தில் அவசியமற்ற இந்தி மொழி ஆதிக்கத்திற்காகப் பணம் செலவழிக்கக் கூடாது' என்று இந்த மாநாட்டில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானத்தை ஆதரித்துத் தமிழவேள் உமாமகேஸ்வரன் பிள்ளையும், சிதம்பரம் என்.தண்டபாணியும் முழக்கமிட்டனர். தீர்மானத்தைக் கொண்டு வந்தவர் யார் தெரியுமா? சி.என்.அண்ணாதுரை.

எப்படிப் பேசுகிறார் மனுஷன்
அன்றைக்கு இந்தி ஆதிக்க எதிர்ப்புப் பிரச்சாரத்தில் அண்ணாதுரை என்ற ஒரு புதிய பெயர் தமிழ்நாட்டு மூலைமுடுக்கெல்லாம் எதிரொலிக்கத் தொடங்கியது. "எப்படிப் பேசுகிறார் மனுஷன்!" "சங்கீதம் கேட்பது போல் இருக்கிறதே." "ஆட்ட பாட்டமில்லாமல் அசைவில்லாமல் மெல்லச் சுழன்று மேடையிலே தமிழ்ச் சொற்களை மாதுளை முத்துக்கள் போல் உதிர்க்கிறாரே!'' "என்ன உவமை! என்ன அழகு!" ''குள்ளமான உருவம்! கள்ளமில்லாப் பார்வை! மடை திறந்தாற் போல் பேச்சு." 'ஆணித்தரமான வாதங்கள். யாரும் மறுக்கவொண்ணாத புள்ளி விவரங்கள். அடடா! பேச்சா அது ! குற்றாலத்து அருவி! கொஞ்சு தமிழ்ச் சிந்து!" இப்படியெல்லாம் அவர் பேச்சுக்குப் படித்தவர் மத்தியிலும், பாமரர் மத்தியிலும் பாராட்டுரைகள் குவிந்தன.

திராவிட இயக்கத் தென்றல்
திராவிட இயக்கத் தென்றலாக, புயலாக சுடராக அனைவர் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட, தமிழர் உரிமைகள் காத்திட, மொழி காத்திட, அடக்குமுறை எதிர்த்து சிறைப்பட்ட அடலேறாக விளங்கிய அண்ணா, 1949ஆம் ஆண்டு வரையில்தான் திராவிடர் கழகத் தளபதியாக விளங்கினார். பின்னர் தி.மு.கழகத்தின் பொதுச் செயலாளரானார்.












Click it and Unblock the Notifications