யாருக்கும் இடையூறு இல்லாமல் 'தண்ணீர் பந்தல்' அமைக்கவும்! நிர்வாகிகளுக்கு திமுக தலைமை வேண்டுகோள்!
சென்னை: தமிழகம் முழுவதும் திமுகவினர் தண்ணீர் பந்தல்கள் அமைத்து பொதுமக்களின் தாகம் தீர்க்க வேண்டும் என திமுக தலைமைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.
தண்ணீர் பந்தலில் குடிநீர், நீர்மோர், இளநீர், குளிர்பானம், தர்பூசணி போன்ற கோடை வெப்பத்தை தணிக்கும் பொருட்களை விநியோகிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக தலைமைக்கழகம் விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு;

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கோடைக்கால வெப்பம் அதிகரிக்கத் தொடங்கி, ஏப்ரல் மாத துவக்கத்திலேயே 100 டிகிரிக்கு மேல் வெப்பம் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் வேண்டுகோளுக்கிணங்க, தமிழக மக்களை இக்கோடைக் கால வெப்பத்திலிருந்து காக்கும் வகையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், தமிழகத்தில் உள்ள மாநகர, நகர, பகுதி, பேரூர், வட்டம் மற்றும் கிராமங்கள் என அனைத்து இடங்களிலும் "தண்ணீர்ப் பந்தல்" அமைத்து, பொதுமக்களின் தாகம் தீர்த்திட வேண்டும்.
அதேபோல் போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் யாருக்கும் எவ்வித இடையூறு இல்லாமல் "தண்ணீர்ப் பந்தல்" அமைக்க வேண்டும்.
அவ்வாறு தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலில் குடிநீர், நீர்மோர், இளநீர், குளிர்பானம், தர்பூசணி போன்ற கோடை வெப்பத்தை தணிக்கும் பொருட்களை பொது மக்களுக்கு வழங்கி, அவர்களின் தாகத்தை தணிக்க வேண்டுமெனவும்;
மாவட்ட - மாநகர ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் - வட்ட - கிளைக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் - மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கோடை காலம் முழுவதும் இத்தண்ணீர் பந்தல் தொடர்ந்து செயல்பட, தங்களை இப்பணியில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications