திருத்தணியில் வேல் வாங்கிய ஸ்டாலின்... சஷ்டி திதியான இன்று திமுக விருப்பமனு விநியோகம்
முருகப்பெருமானுக்கு உகந்த சஷ்டி திதியான இன்று சட்டசபைத் தேர்தலில் போட்டியிட உள்ளவர்களுக்கு விண்ணப்பம் விநியோகம் செய்ய உள்ளது திமுக.
சென்னை: திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று முதல் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. முருகப்பெருமானுக்கு உகந்த சஷ்டி திதியான இன்று முதல் பெருமாளுக்கு உகந்த துவாததி திதியான 24ஆம் தேதி வரை விருப்பமனுக்களை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் புதுச்சேரியில் ஏப்ரல் மாதத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி இந்த மாத இறுதியில் வெளியாக உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆளுங்கட்சியான அதிமுக, எதிர்கட்சியான திமுக, முதன்முறையாக சட்டசபைத் தேர்தலில் களமிறங்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் பல கட்ட பிரச்சாரத்தை முடித்து விட்டன. கூட்டணி கட்சிகளும் தேர்தல் பணிகளை சைலண்ட்டாக செய்து வருகின்றனர். நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து களமிறங்குகிறது. இதற்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகளை தொடங்கி விட்டார் சீமான்.
விருப்பமனு விண்ணப்பம்
சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சிகள் விருப்பமனுக்களை விநியோகம் செய்ய உள்ளனர். ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அதிமுக விருப்பமனு விநியோகம் செய்ய உள்ளது. மக்கள் நீதி மய்யம் கமல் ஹாசன் வரும் 21ஆம் தேதி முதல் விருப்பமனு அளிக்கலாம் என அறிவித்துள்ளார்.
இன்று முதல் திமுவில் விருப்பமனு
திமுக சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரியில் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ரூ.1000 செலுத்தி விண்ணப்பப் படிவத்தை அண்ணா அறிவாலயத்தில் பெற்றுக்கொள்ளலாம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
கட்டணம் எவ்வளவு
விண்ணப்பக் கட்டணம் ரூ. 25 ஆயிரமாகும். பெண்கள் மற்றும் தலித் தொகுதிகளுக்கு இந்தத் தொகை 15 ஆயிரம் ரூபாய் ஆகும். கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளுக்கு விண்ணப்பித்திருந்தால், விண்ணப்பத் தொகை திருப்பி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சஷ்டி திதியில் விண்ணப்பம் விநியோகம்
இன்றைய தினம் முருகப்பெருமானுக்கு உகந்த சஷ்டி திதியாகும். சஷ்டி திதியில் தொடங்கும் காரியம் வெற்றியடையும் என்று நம்பிக்கை உள்ளது. திருத்தணியில் தேர்தல் பிரச்சாரம் செய்த ஸ்டாலினின் கையில் தொண்டர்கள் வேல் கொடுத்தனர். அவரது மனைவி துர்கா,கந்த சஷ்டி விழா நடைபெறும் திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்தார். இப்போது திமுக சார்பில் சஷ்டி திதியில் விருப்பமனு விநியோகம் செய்யப்படுகிறது.