"இந்தி படிக்க வேண்டாம் என்று யார் தடுத்தது?" திமுக எம்பி திருச்சி சிவா கேள்வி
சென்னை: தமிழ்நாட்டில் இந்தியை படிக்க வேண்டாம் என்று யார் தடுத்தது என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் அரவணைக்கும் தோழமை என்ற பெயரில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் சேகர் பாபு, திமுக எம்பி திருச்சி சிவா, சுப வீரபாண்டியன் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா பேசுகையில், மக்களுக்கான திட்டங்கள் செய்திருக்கிறோம் என்பதற்கு வரலாறு வேண்டும், செய்யப் போகிறோம் என்று சொல்வதற்கு திட்டங்கள் வேண்டும். இது அத்தனையும் திமுகவுக்கு இருக்கிறது.

விடுதலையின் போது ஆட்சி மொழி
இந்தியாவில் ஆட்சி மொழிக் குழு என்று உள்ளது. அது அரசியல் சட்டத்திற்கு பின், 1963ல் ஆட்சி மொழி சட்டம் நிறைவேற்றப்பட்ட பின், நீண்ட ஆண்டுகளுக்கு பின் குழு உருவாக்கப்பட்டது. நாடு விடுதலைப் பெற்றபோது, நமது ஆட்சி மொழி இந்தி கிடையாது. இந்தியை யார் படிக்க வேண்டாம் என்று கூறியது.

இந்தி திணிப்பு
இந்தி படிக்கக் கூடாது என்று சொல்லுகிறவர்களாக திமுகவினர் இருந்தால், இந்தி பிரச்சார சபாவின் தலைமை இடம் தமிழ்நாட்டில் இருக்க முடியாது. நாங்கள் திணிப்பவர்களையும், திணிப்பையும் தான் எதிர்க்கிறோம். இந்தியா என்பது ஒருநாடு அல்ல. இது பல நாடுகளின் தொகுப்பு. அதனால் தான் ஒன்றியம் என சொல்லுகிறார்கள்.

ஒன்றியம் விளக்கம்
நாடு என்பதை மாநிலங்கள் என்று பின்னாளில் சொற்றொடராக மாற்றிக்கொண்டனர். ஒரு நாடு என்றால் ஒரு மொழி, ஒரு இனம், ஒரு கலாச்சாரம் இருக்க வேண்டும். ஆனால் பல மொழி, பல இனம், பல கலாச்சாரம், பல பண்பாடுகள், பல மதங்கள் உள்ள நாட்டில் நாம் ஒன்று சேர்ந்த இருப்பதுதான் கூட்டாட்சி தத்துவம். வெள்ளைக்காரர் காலத்தில் இங்கு ஆங்கிலம் தான் ஆட்சி மொழியாக கொண்டு வரப்பட்டது தான் தொடர்ந்து இருந்தது.

இந்தியை திணிக்க முடியாது
தற்போது அமித் ஷா தலைமையிலான குழு குடியரசுத் தலைவரிடம் கொடுத்துள்ள அறிக்கையை உடனடியாக அமல்படுத்திட முடியாது. உயர் கல்வி நிறுவனங்களில் இந்தி தான் இனி பயிற்று மொழியாக இருக்கும் என்பது உடனடியாக நடைமுறைப்படுத்த முடியாது. அந்த ஆலோசனைகளை, பரிந்துரைகளை நாடாளுமன்றத்தில் வைக்க வேண்டும். அதனை நாங்கள் பார்த்துக் கொள்வோம். மாநிலங்களுக்கு அனுப்பப்படும் போது அமைச்சர்கள் பார்த்துக் கொள்வார்கள். தமிழை காப்போம் என்று பேசியதன் விளைவு தான், இன்று பல்வேறு மாநிலங்களில் எதிரொலிக்கிறது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications