திமுகவின் இரட்டை வேடம்.. ஆட்சிக்கு வந்ததும் பேச்சை மாற்றிய மு.க.ஸ்டாலின்.. எடப்பாடி பழனிசாமி பேட்டி!
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையில் பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக கடுமையான விவாதம் நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்திருந்த நிலையில், இரு தரப்பிலும் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் எஃப்ஐஆர் பதிவு செய்த ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
இதனை ஆய்வு செய்த சபாநாயகர் அப்பாவு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்வதே உண்மை. 12 நாட்களுக்கு பின்னரே பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதாக அறிவித்தார். இதன்பின் சட்டப்பேரவை முடிவடைந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது எடப்பாடி பழனிசாமி பேசுகையில், திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் 20 சதவிகிதம் வரை மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள 80 சதவிகித வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது. தேர்தலின் போது நீட் விலக்கு பெறுவோம் என்று கூறினார்கள். ஆட்சிக்கு வந்ததும் மத்திய அரசு தான் ரத்து செய்ய முடியும் என்று முதலமைச்சர் கூறுகிறார்.
திமுக ஆட்சிக்கு வந்த பின் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்டவற்றின் விலை அதிகரித்துள்ளது. அனைத்து நகரங்களிலும் பேருந்துகள் மோசமான நிலையில் உள்ளது. வருவாய் அதிகரித்து மகளிர் உரிமை தொகையை கொடுக்கவில்லை. கடனை வாங்கி பணம் கொடுக்கிறார்கள். இதன் மூலமாக இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கும் மாநிலம் என்ற சாதனையை தமிழக அரசு படைத்துள்ளது. சபாநாயகர் ஆளுங்கட்சிக்கு தான் ஆதரவாக பேசுவார். பொள்ளாச்சி வழக்கை பொறுத்தவரை பாதிக்கப்பட்டவர்கள் அளிக்கும் புகாரின் அடிப்படையில் தான் வழக்குப்பதிவு செய்ய முடியும்.
யாரை குற்றம்சாட்டுகிறார்களோ, அவர்களை தான் கைது செய்ய முடியும். முதல்வர் ஸ்டாலின் 10 நாட்களுக்கு முன்பாகவே புகார் அளித்ததாக கூறுவார். எதன் அடிப்படையில் அப்படி கூறுவார். நாங்கள் எஃப்ஐஆர் பதிவு செய்த தேதியையும், க்ரைம் நம்பரையும் ஆதாரமாக கொடுத்திருக்கிறோம். பொள்ளாச்சி வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், அதன் தீர்ப்பு வரும் போது உண்மை என்னவென்று தெரியும்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில், அதிமுக இல்லையென்றால் விஷயத்தை மறைத்திருப்பார்கள். இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர் யார் என்று அனைவருக்கும் தெரியும். திமுக மாநாட்டுக்கு செல்வாராம், முக்கிய பிரமுகர்களை பார்ப்பாராம்.. ஆனால் திமுகவில் இல்லையாம்.. இந்த விவகாரத்தில் யாரோ ஒரு பெரிய புள்ளி சம்மந்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அதனால் தான் யார் அந்த சார்? என்று கேட்கிறோம். யார் அந்த சார்? என்ற கேள்விக்கு அமைச்சர்கள் ஏன் பதற்றம் அடைகிறார்கள். நாங்கள் யாரையும் குறிப்பிட்டு நாங்கள் சொல்லாத போது ஏன் இவருக்கு பதற்றம் வருகிறது? யார் அந்த சார் தொடர்பாக ஆதாரம் இருக்கா என்று கேட்பதற்கு நீங்கள் ஏன் ஆட்சி நடத்த வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்
தொடர்ந்து, பெரியார் மீதான சீமானின் கருத்து குறித்த கேள்விக்கு, உண்மையில் வருத்தத்திற்குரியது. மறைந்த பெரும் தலைவர் பற்றி அவதூறாக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் வாழ்ந்த காலத்தில் சாமானிய மக்களுக்கு விளைந்த நன்மைகள் ஏராளம். தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பெரியார் போல் இருந்தவர்களால் தான் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
அதனால் அப்படியொரு தலைவர்களை விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுகிறதா என்ர கேள்விக்கு, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications