தேர்தல் ஆணையம் அனுமதி.. இனி வேட்பாளர்களும் மக்களை காக்கும் பணிகளில் ஈடுபடுங்கள்.. ஸ்டாலின் அறிக்கை
சென்னை: சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களும் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடத் தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ள நிலையில், இரண்டாவது அலையில் இருந்து மக்களைக் காக்கும் பணியில், வேட்பாளர்களும் இணைந்து தொண்டாற்ற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு தற்போது 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் 10,723 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாநிலத்தில் தற்போது கொரோனா பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளதால், பல புதிய கட்டுப்பாடுகளை மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தேர்தல் ஆணையமும் அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் 20ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள்.. யாருக்கு அனுமதி? எதற்கெல்லாம் தடை? முழு விவரம்
ஒன்றிணைவோம் வா
இந்நிலையில், கொரோனா இரண்டாவது அலையிலிருந்து மக்களைக் காக்க திமுக வேட்பாளர்களும் இணைந்து தொண்டாற்ற வேண்டும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்றின் முதலாவது அலையின் போது "ஒன்றிணைவோம் வா" என்ற மாபெரும் மக்கள் இயக்கம் மூலம் மனித நேயப் பணிகளை ஆற்றிய திமுக சார்பில் இரண்டாவது அலை துவங்கியவுடனும் மாநிலம் முழுவதும் திமுகவினர் கபசுரக் குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதை நானறிவேன்.
தேர்தல் ஆணையம் அனுமதி
இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர்களாகப் போட்டியிட்டவர்கள் தேர்தல் நடத்தை விதி முறைகள் காரணமாக கொரோனா முன்னெச்சரிக்கை பணியில் ஈடுபட முடியாத நிலை இருந்தது. ஆகவே, அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி மூலம் தேர்தல் ஆணையத்திடம் இதற்கு திமுக சார்பில் அனுமதி கோரப்பட்டது.
கபசுரக் குடிநீர்
திமுக கோரிக்கையை ஏற்று கொரோனா தடுப்புப் பணியின் ஓர் அங்கமாக கபசுரக் குடிநீர் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட ஆட்சேபனை இல்லை எனத் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. எனவே, திமுக வேட்பாளர்களும் வேட்பாளர்களாக இருக்கும் மாவட்டச் செயலாளர்களும் கபசுரக் குடிநீர் வழங்கும் பணியில் முழு மூச்சாக ஈடுபட்டு, கொரோனா இரண்டாவது அலையிலிருந்து மக்களைக் காப்பாற்றிடத் தீவிரப் பணியாற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
ஸ்டாலின் வேண்டுகோள்
அவ்வாறு கபசுரக் குடிநீர் வழங்கும் போது, அந்த நிகழ்ச்சி நடைபெறும் இடம் உள்ளிட்ட விவரங்களைச் சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு வேட்பாளர்கள் அனைவரும் உரிய வகையில் தெரிவிக்க வேண்டும். மேலும், அரசு அறிவுறுத்தியுள்ள தனிமனித இடைவெளி, முகக் கவசம் உள்ளிட்ட கொரோனா தடுப்பிற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாகக் கடைப்பிடித்து, பொது மக்கள் அனைவருக்கும் கபசுரக் குடிநீர் வழங்கிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.