அடி தூள் ஸ்டாலின்.. "புது அரசு" அமையும்வரை.. சட்டம் ஒழுங்கை காக்கணும்.. போலீஸுக்கு ஸ்டிராங் கோரிக்கை
திமுக தலைவர் ஸ்டாலின் காவல்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்
சென்னை: புது அரசு அமையும்வரை தமிழ்நாட்டில், சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் காவல்துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளார். அரக்கோணம் அருகே தேர்தல் மோதல் இருவரது கொலையில் முடிந்திருப்பது தனக்கு வேதனை தருவதால், இந்த கோரிக்கையை விடுத்திருப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அரக்கோணம் அருகேயுள்ள சோகனூர் காலனியைச் சேர்ந்தவர் அர்ஜுனன்.. 20 வயதாகிறது.. இவரது நண்பர் சூர்யா.. அவருக்கு 25 வயதாகிறது.. 2 பேரும் நண்பர்கள்.
இவர்கள் 2 பேரையும் நேற்று முன்தினம் இரவு 10 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக அடித்து கொலை செய்துள்ளது.. தேர்தல் முன்விரோத தகராறில் இந்த கொலை நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

திருத்தணி
தாக்குதலுக்கு ஆளான மேலும் 3 பேர் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்கள்.. கொல்லப்பட்ட இளைஞர்களின் உறவினர் மற்றும் சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்... இதையடுத்து, பதற்றம் நிலவியதால் உடனடியாக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசாரும் குவிக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, மொத்தம் 8 பேர் குற்றவாளிகளாக சேர்த்துள்ளது காவல்துறை. இதில் 4 பேர் கைதாகி உள்ளனர்.. மற்றவர்களை தேடி வருகிறார்கள்.

அதிர்ச்சி
கடந்த 2 தினங்களாகவே இந்த இரட்டை கொலை தமிழகத்தை அதிர வைத்து வருகிறது.. இரட்டை கொலையில் அதிமுக கூட்டணி கட்சிகளின் வாக்கு அரசியல் இருப்பதாக திருமாவளவன் அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டிருக்கிறார். இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினும் இதே விவகாரத்தை கையில் எடுத்துள்ளார். இது தொடர்பாக ஒரு அறிக்கையும் விடுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரக்கோணம்
அந்த அறிக்கை இதுதான்: "அரக்கோணம் அருகே தேர்தல் தகராறில் அர்ஜுனன், சூரியா ஆகிய இருவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. சட்டமன்றத் தேர்தல் என்பது ஜனநாயகத்தில் நடைபெறும் ஒரு திருவிழா. அதில் அனல் பறக்கும் பிரச்சாரங்கள் நடைபெறுவதும் - ஆக்கபூர்வமான முறையில் கருத்துப் பரிமாற்றங்கள் செய்வதும் மட்டுமே ஜனநாயகத்திற்கும், பொது அமைதிக்கும் வலு சேர்க்கும்.

சாதீய வன்மம்
இந்த நிகழ்வைப் பொறுத்தமட்டில் - தேர்தல் நேரத்தில் நடைபெற்ற மோதல், இப்போது இருவர் சாதிய வன்மத்துடன் கொலை செய்யப்பட்டுள்ள அவலத்தில் முடிந்திருப்பது கண்டனத்திற்குரியது. கொலை செய்யப்பட்ட இருவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிகாரிகள்
சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு முடிந்துள்ள நிலையில் - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசு அமையும் வரை தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டுவதற்கு காவல்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் - எங்கும் - யாராலும் பொது அமைதிக்குப் பங்கம் விளைந்து - பொதுமக்களின் நிம்மதியைக் குலைக்கும் நடவடிக்கைகள் அரங்கேற அனுமதிக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

சகோதரர்கள்
எத்தனை கருத்து மோதல்கள் தேர்தல் களத்தில் இருந்தாலும் - தேர்தலோடு அவற்றை மறந்து விட்டு - தமிழக மக்கள் அனைவரும் சகோதரர்களாக - சமூக நல்லிணக்கத்துடன் மாநிலத்தின் முன்னேற்றத்திற்குப் பாடுபட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.

சுணக்கம்
எனவே, தமிழகக் காவல்துறைத் தலைவர் அவர்கள் உடனடியாகத் தலையிட்டு - மாவட்டக் காவல்துறை அதிகாரிகள் அவரவர் பகுதிகளில் சட்டம் - ஒழுங்குப் பணிகளை நிலைநாட்டுவதில் எவ்வித சுணக்கமும் காட்டக் கூடாது என்றும் - சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு செயல்படுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து - கைது செய்து - சட்டத்தின் முன்பு நிறுத்திட வேண்டும் எனவும் அறிவுறுத்திடுமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications