முதல்வருடன் ஆசையாய் ஒரு புகைப்படம்... நிற்கவிடாத நிர்வாகிகள்... விறுவிறுவென சென்ற வெற்றியாளர்கள்..!
சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று மாலை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆசையாய் ஒரு புகைப்படம் எடுத்து அதை வீட்டின் சுவற்றில் பொருத்தலாம் என நினைத்து, புகைப்படக் காரர்களை பார்த்துக்கொண்டே பலரும் நின்றதை காண முடிந்தது.

ஊரக உள்ளாட்சி
9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றியை அறுவடை செய்துள்ளது. வரலாறு காணாத வகையில் இந்த முறை வெற்றியை குவித்த திமுக வேட்பாளர்கள், கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினிடம் வெற்றிச்சான்றிதழை சமர்பித்து வாழ்த்துப்பெற வேண்டி சென்னையில் குவிந்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று மட்டும் பல நூறு பேர் முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளனர்.

ஏற்கனவே சந்திப்பு
இதில் மாவட்ட கவுன்சிலர்களாக வெற்றிபெற்றவர்களில் பெரும்பாலானோர் இதற்கு முன் பல முறை முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்திருப்பதோடு புகைப்படமும் எடுத்துள்ளனர். இதனால் இவர்கள் யாரும் புகைப்படம் எடுப்பதற்காக மேடையில் தேங்கி நிற்காமல், ஸ்டாலின் கையில் புதிய வேட்டியையோ அல்லது சால்வையையோ கொடுத்தோமோ வணக்கத்தை போட்டோமா என விறுவிறுவென நகர்ந்தனர்.

ஆர்வமிகுதி
ஆனால் ஒன்றியக் கவுன்சிலர் உட்பட கிராம வார்டு உறுப்பினர்களாக வெற்றி பெற்ற பலருக்கும் இதுவே ஸ்டாலினை நேரில் அருகாமையில் பார்ப்பது முதல் முறை. இதனால் அவர்கள் ஆர்வமிகுதியில் ஸ்டாலின் அருகே ஒரு நொடி நின்றவாறு கீழே இருந்த புகைப்படக்காரர்களை பார்ப்பதும் பிறகு தயக்கத்துடன் அங்கிருந்து செல்வதுமாக இருந்தார்கள். இந்நிலையில் அவர்களை அமைச்சர் துரைமுருகன் பார்த்த பார்வையும் அவரது உடல்மொழியும் வேறு விதம்.

வாங்க
இது ஒரு புறமிருக்க மேடையில் இருந்த திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு, ஸ்டாலின் அருகில் புகைப்படம் எடுக்க நின்றவர்களை வாங்க, போதும் என நிற்கவிடவில்லை. இதேபோல் திமுக அமைப்புச் செயலாளர்களில் ஒருவரான அன்பகம் கலையும் கையசைத்த படி வாங்க வாங்க என மேடைக்கு வந்தவர்களை கீழிறக்கிவிட்டுக் கொண்டிருந்தார். சாமியே வரம் தந்தாலும் பூசாரி விடமாட்டார் போல் என்ற பழமொழிக்கு ஏற்ப முதலமைச்சர் ஸ்டாலினே பொறுமையாக நின்ற போதும் அவரை சுற்றியிருந்தவர்கள் சும்மாயிருப்பதில்லை என திமுக உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் முணு முணுத்தனர்.












Click it and Unblock the Notifications