உடம்பெல்லாம் நிறைந்து வழியும் நகைகள்.. கோடிக்கணக்கில் பலரிடம் மோசடி.. சிக்கினார் திமுக முத்துவேல்!
பண மோசடி வழக்கில் திமுக பிரமுகர் அதிரடி கைது செய்யப்பட்டுள்ளார்
சென்னை: கழுத்து, கை என உடபெல்லாம் வழிந்து நிறைகிறது தங்க நகைகள்.. சென்னையில் 100 கோடி வங்கி கடன் வாங்கி தருவதாக சொல்லி ஆட்டையை போட்ட திமுக பிரமுகர் முத்துவேலை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் முத்துவேல். இவர் லயன் முத்துவேல் என்று தனக்குதானே பெயர் வைத்து கொண்டார். வயசு 42 ஆகிறது.
திமுகவின் பகுதி அமைப்பாளராக உள்ளார். கொளத்தூர், வில்லிவாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில், இவருக்கு தெரியாத நபர்களே இருக்க முடியாது. அந்த அளவுக்கு பிரபலம். இவருக்கு போயஸ் கார்டனில் ஆபீஸ் உள்ளது. பேருக்குதான் இது ஆபீஸ்.. உள்ளே நடப்பது எல்லாம் கட்டப்பஞ்சாயத்துதானாம். இதில்தான் கோடி கணக்கில் வசூல் செய்து வந்திருக்கிறார் முத்துவேல்.

பணத்தேவை
இவருக்கு 2 அள்ளக்கைகள் இருக்கிறார்கள். ஒருவர் அஜ்மல், இன்னொருவர் வாசு.. இவர்கள்தான் முத்துவேலுக்கு ஆல் இன் ஆல். யாரெல்லாம் கோடீஸ்வரர்கள் என்பதை நோட்டம் விடுவார்கள். அவர்களின் பணத்தேவையையும் புரிந்து கொள்வார்கள்.

வங்கி கடன்
பிறகு அவர்களிடம் உதவு செய்வதுபோல பேச்சு தந்து நட்பை ஏற்படுத்தி கொள்வார்கள். பேங்கில் பணம் வாங்கி தருகிறோம், எந்த பிரச்சனையும் வராமல் பார்த்து கொள்கிறோம், என்றெல்லாம் பேசியே பணிய வைப்பார்கள். இதற்கு கமிஷனும் பெற்று கொள்வார்கள். எல்லாமே கோடிக்கணக்கு வங்கி கடன்கள்தான்!

அபகரிப்பு
இவர்கள் 2 பேருக்கும் மாசம்தோறும் பல லட்சம் ரூபாய் தந்து வந்துள்ளார் முத்துவேல். இதைதவிர, போலி ஆவணங்கள் வாயிலாக, பலருடைய நிலங்களை அபகரித்து, குறைந்த விலைக்கு விற்று விடுவார். யாராவது புகார் தர வந்தால், உடனே சமரச பேச்சு நடத்தி, 'செட்டில்' செய்து விடுவதுதான் முத்துவேலின் பிசினஸ்!

நிகில் கண்ணா
இப்படி சென்னை, ஆந்திராவை சேர்ந்த, பல தொழில் அதிபர்களுக்கு, வங்கி கடன் வாங்கித் தருவதாக, கோடிக்கணக்கில் சுருட்டி இருக்கிறார் இந்த முத்துவேல். இப்படித்தான் நிகில் கண்ணா என்பவர் இவர்களிடம் சிக்கினார். இவர் ராஜஸ்தானை சேர்ந்தவர். கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். சென்னையிலும் ஒரு பிராஞ்சு ஆரம்பிக்க, வங்கி கடனுக்கு முயற்சி செய்து வந்தபோதுதான் முத்துவேல் கண்ணில் சிக்கி கொண்டார்.

மிரட்டல்
போயஸ்கார்டன் ஆபீஸை பார்த்ததுமே நிகில் கண்ணா வாயை ஆச்சரியத்தில் பிளந்துவிட்டார். தனக்கு எப்படியும் பேங்கில் இருந்து 100 கோடி ரூபாய் கடன் வந்திடும் என்று நம்பியும் உள்ளார். ஆனால் முத்துவேல் & கோ ஒரு போலி டாக்குமெண்டை காட்டி, பேங்க் லோன் கன்பார்ம் ஆகிவிட்டது என்று சொல்லி, அதற்கு 2.62 கோடி ரூபாயையும் கமிஷனாக வாங்கி உள்ளார்கள். ஆனால் பேங்கில் இருந்து கேட்ட கடன் தொகை வரவே இல்லை. நாள் ஆக ஆக நிகில் கண்ணாவுக்கு திகில் ஆனது.

புழல்
எப்படியும் பணம் வராது என்று உறுதியாக தெரிந்துவிட்டது. அதனால் கொடுத்த கமிஷனையாவது வாங்கலாம் என்று கேட்டால், அடியாட்கள் வைத்து மிரட்ட ஆரம்பித்துள்ளார் முத்துவேல். இதற்கு பிறகுதான் வேறு வழியில்லாமல் நிகில் கண்ணா மத்திய குற்றப்பிரிவில் புகார் தந்தார். இதையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து, முத்துவேலை சுற்றி வளைத்து கைது செய்து புழலில் அடைத்தனர். ஆனால் இவரது வலது, இடது கைகளாக இருந்த 2 பேரையும் காணோம். அவர்களையும் தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications