நயினார் நாகேந்திரன் பாஜக தலைவர் ஆனதுமே சாதிவெறி, மதவெறி ஏறிடுச்சு.. அமைச்சர் மனோ தங்கராஜ் அட்டாக்!
சென்னை: பாஜக மாநிலத் தலைவர் ஆனதும் சாதி வெறியும், மத வெறியும் நயினார் நாகேந்திரன் நெஞ்சுக்குள் குடிபெயர்ந்துள்ளது என்று திமுக அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைப் பாராட்டி திருப்பூரில் நேற்று பாஜக சார்பில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் கருத்து தெரிவிப்போர், தேசப்பற்று இல்லாதவர்கள் பாகிஸ்தானுக்கே செல்லுங்கள் என்று பேசியிருந்தார்.

இந்த நிலையில் அவரது பேச்சுக்கு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், "நயினார் நாகேந்திரன் இப்படி பேசுவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். பாஜக தலைவர் ஆனதும் சாதி வெறியும், மத வெறியும் அவருள் குடிபெயர்ந்துள்ளது. இதனால் வெளிப்படையாகவே தொடர்ந்து வெறுப்பரசியல் பேசி வருகிறார்.
இதனால் அவருக்கான அடையாளத்தை அவர் இழந்து விட்டார். 1500 ஆண்டுகள் இந்திய மண்ணை ஆக்கிரமித்திருந்த மனுஸ்மிருதியும், பாஜகவின் மூதாதையர்களான இந்து மகாசபா, ஆர்எஸ்எஸ் போன்ற மதவெறி அமைப்புகளின் இந்து ராஷ்ட்ரா முழக்கமும் தான் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்குக் காரணம்.
பிரிட்டிஷாரிடம் ஓய்வூதியம் வாங்கிக் கொண்டு தங்கள் வயிற்று பிழைப்பை ஆற்றியவர்களின் வாரிசுகள், நாட்டுப்பற்று குறித்து பேசுவது, "சாத்தான் வேதம் ஓதும்" கதை. தேசப்பிதாவை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகளின் வாரிசுகள் தேசப்பற்று குறித்து வாய் திறக்கலாமா? சுமார் 1500 ஆண்டுகள் இந்தியாவின் 80 சதவீதம் மக்களை மாடுகளாகக் கூட மதிக்காமல் மனுஸ்மிருதி என்னும் கொடிய நச்சுப்பாம்பை உலாவவிட்டு, பாமர மக்களின் இரத்தத்தை உறிஞ்சி வாழ்ந்த கோழைகளின் வழியை பின்பற்றுபவர்களுக்கு திடீர் மக்கள் பற்றும், நாட்டுப் பற்றும் வருவது - Patriotism is the last refuge for a Scoundrel என்பதை தெளிவுபடுத்துகிறது.
பிரிட்டிஷாரின் கால்பாதம் தொட்டு தவழ்ந்து மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து சிறையில் இருந்து வெளிவந்த தங்களின் கொள்கை மூதாதையர்கள் வழியில் வந்தவர்கள், இப்போது அமெரிக்க அதிபரின் அடிவருடிகளாக மாறி, நாட்டின் இறையாண்மையை கேலிக்கூத்தாக்கி உள்ளது, ஒட்டுமொத்த இந்தியர்களையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications