திடீரென நடுரோட்டில் படுத்து ஆய்வு செய்த அமைச்சர் நாசர்! ஜேர்க் ஆன அதிகாரிகள்.. ஆவடியில் பரபர
சென்னை: ஆவடியில் ராட்சத குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை ஆய்வு செய்யும் போது, படுத்து பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் திடீரென சாலையில் படுத்து ஆய்வு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அமைச்சரவையில் பால்வளத் துறை அமைச்சராக உள்ளவர் சா.மு.நாசர். இவர் கடந்த சட்டசபைத் தேர்தலில் ஆவடி தொகுதியில் போட்டியிட்டு மாஃபா பாண்டியராஜனை தோற்கடித்திருந்தார்.
பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தொடர்ச்சியாகத் தனது தொகுதியிலும் ஆக்டிவாகவே இருந்து வருகிறார். இதற்கிடையே இன்று அவர் செய்த செயலின் வீடியோ சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.

வீணான குடிநீர்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கோடைக் காலங்களில் குடிநீருக்கு அவ்வப்போது தட்டுப்பாடு ஏற்படும். இதைப் போக்க அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டு, குடிநீர் தட்டுப்பாடு ஓரளவுக்குக் கட்டுக்குள் சரி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி குடிநீர் தேவை பூர்த்தி செய்ய பல்வேறு இடங்களில் இருந்து சேகரிக்கப்படும் நீரானது திருமுல்லைவாயில் நாகம்மை நகரிலுள்ள 15 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சேகரிக்கப்படும்.

அமைச்சர் நாசர்
பின்னர், அது ராட்சத குழாய் மூலம் குடியிருப்புகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதற்கிடையே திடீரென ஏற்பட்ட உயர் அழுத்தம் காரணமாக ராட்சத குழாயில் அமைக்கப்பட்டிருந்த வால்வு-இன் (valve) உள் பகுதியில் உடைப்பு ஏற்பட்டுக் குடி நீர் சாலையில் வழிந்தோடியது. குடிநீர் வீணாகச் செல்வதால் இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் அறிவுறுத்தினர். இதற்கிடையே இது தொடர்பாக அமைச்சர் சா.மு.நாசருக்கும் சிலர் தகவல் தெரிவித்துள்ளனர்.

அறிவுறுத்தல்
இதையடுத்து பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ராட்சத குழாயில் ஏற்பட்ட உடைப்பை நேரில் சென்று ஆய்வு செய்தார். குடிநீர் வீணாவதைத் தடுக்க உடனடியாக ராட்சத வால்வை மாற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆவடி மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதிகாரிகளும் உடனடியாக ராட்சத வால்வை மாற்ற நடவடிக்கை எடுப்பதாக என்று அமைச்சரிடம் தெரிவித்தனர். இந்த ஆய்வின் போது அமைச்சர் செய்த செயல் தான் இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

நடுரோட்டில் படுத்து ஆய்வு
ராட்சத வால்வு உடைப்பு ஏற்பட்ட இடத்தில் ஆய்வு செய்து கொண்டிருந்த அமைச்சர் சா.மு. நாசர், அப்போது சற்றும் யோசிக்காமல் திடீரென ராட்சத வால்வு உடைந்ததை உறுதிசெய்யச் சாலையில் தரையோடு தரையாகப் படுத்து ஆய்வு செய்தார். வால்வு உடைந்து போனதை அமைச்சர் உறுதி உறுதி செய்தார். ஆய்வின் போது அமைச்சர் திடீரென சாலையில் படுத்து ஆய்வு செய்த இந்தச் சம்பவம் பொதுமக்கள் இடையே மட்டுமின்றி குடிநீர் வாரிய அதிகாரிகள் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அதிகாரிகளுக்கு உத்தரவு
மேலும், மிக விரைவில் ராட்சத வால்வு சரி செய்யப்பட்டு பொது மக்களுக்குக் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் அதிகாரிகளிடம் உத்தரவிட்டார். இதையடுத்து உடனடியாக ராட்ச வால்வை சரி செய்யும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஆய்வின் போது, அதிகாரிகள் கூட யோசிக்கும் ஒரு செயலை அமைச்சர் சா.மு.நாசர் செய்தது தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.












Click it and Unblock the Notifications