"மரியாதை".. 2 அமைச்சர்கள்.. என்னை பார்த்ததுமே.. அவசரத்தில் வெளியான போட்டோ அது.. மாரிமுத்து விளக்கம்
சென்னை: "2 அமைச்சர்களும் என்னை எழுந்து நின்று வரவேற்றார்.. உட்கார சொன்னார்கள்.. நான்தான் உடனே கிளம்பிவிட்டேன்.. அவசரத்தில் எடுத்த போட்டோக்கள் அப்படி வெளியாகிவிட்டது" என்று கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ மாரிமுத்து, விளக்கம் தந்துள்ளார்..!
இந்த முறை திருத்துறைப்பூண்டி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக மாரிமுத்து போட்டியிட்டார்... இவர் எளிமையானவர்.. குடிசை வீட்டில்தான் வசித்து வருகிறார்..
ஆனால், மக்கள் பிரச்சனைகளை ஆழமாக கவனிப்பவர்.. தன் தொகுதி மக்கள் நலனுக்கான பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவர். அதனால்தான், அதிமுகவை விட, இங்கு மாரிமுத்துவுக்கு எப்போதுமே செல்வாக்கு அதிகம்.
இந்தியாவில் படிப்படியாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு - 2,91,28,267 பேர் குணமடைந்தனர்
அமைச்சர்
இந்நிலையில், முத்துப்பேட்டை பகுதியை தனி தாலுகாவாக அறிவிக்கக் கோரி, வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனை நேரில் சந்தித்து எம்எல்ஏ மாரிமுத்து மனு அளித்திருந்தார்.. அப்போது அமைச்சர் உட்கார்ந்துகொண்டே அந்த மனுவை வாங்கினாராம்.. அதேபோல, திருத்துறைப்பூண்டியில் புறவழிச்சாலை அமைக்கக் கோரி நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எவ வேலுவை சந்தித்து மனு அளித்துள்ளார் மாரிமுத்து.. எவ வேலுவும் சேரில் உட்கார்ந்து கொண்டே அந்த மனுவை வாங்கி கொண்டாராம்.
கொந்தளிப்பு
இந்த விஷயம்தான், திருத்துறைப்பூண்டி தொகுதி மக்களிடமும், கொந்தளிப்பை ஏற்படுத்தியது.. ஒரு எம்எல்ஏ, தன் தொகுதி பிரச்சனையை மனுவாக கொண்டு வந்து கொடுத்தால், அமைச்சர்கள் எழுந்து நின்றுதானே வாங்கியிருக்க வேண்டும்? அல்லது எம்எல்ஏவையும் சேரில் உட்கார வைத்துவிட்டு, அதன்பிறகு மனுவை வாங்கியிருக்கலாமே? என்ற ஆதங்க கேள்விகள் எழுந்தன.
சர்ச்சை
அதேசமயம், இந்த சம்பவங்கள் எல்லாம் எதேச்சையாக நடந்த ஒன்றாகத்தான் இருக்க வேண்டும், வேண்டுமென்றே திட்டமிட்டு இப்படி திமுக செய்ய வாய்ப்பும் இல்லை, அதற்கு அவசியமும் இல்லை.. மாரிமுத்து மீது அனைத்து கட்சி தலைவர்களுக்குமே நல்ல மதிப்பு இருக்கும்போது, யதேச்சையாக நடந்ததையெல்லாம் அரசியலாக்கக்கூடாது" என்று மாற்று கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன.
சட்ப்பேரவை நிகழ்ச்சி
இதுகுறித்து எம்எல்ஏ மாரிமுத்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அதில்,"சட்டப்பேரவை நிகழ்ச்சி முடிவுற்றதும் திருத்துறைப்பூண்டி புறவழி சாலை பணிகளை விரைந்து தொடங்க வேண்டிய கோரிக்கைக்காக அமைச்சர் ஏவ வேலுவை சந்தித்து விண்ணப்பம் கொடுக்க அவரது ரூமுக்கு சென்றேன்... அப்போது அவர் என்னை எழுந்து நின்று வரவேற்று, எதிரில் இருந்த இருக்கையை காட்டி உட்காரும்படி கேட்டுக் கொண்டார்.
கோரிக்கை
நான் மேலும் சில அமைச்சர்களையும், முதலமைச்சரையும் சந்திக்க வேண்டிய அவசரம் காரணமாக நின்றபடியே கோரிக்கை விண்ணப்பத்தை கொடுத்து திரும்பினேன்... மேலும் அதனைத் தொடர்ந்து முத்துப்பேட்டை தனி தாலுகா கோரிக்கைக்காக மாண்புமிகு அமைச்சர் KKSSR ராமச்சந்திரனையும் சந்தித்து மனு கொடுக்க சென்றேன். அவரும் என்னை உட்கார சொன்னார்.. பிறகு சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தோம்.
போட்டோக்கள்
அப்போது என்னிடம் மிகுந்த அக்கறையோடு விசாரித்ததோடு அமைச்சர் என்ற முறையில் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளுங்க எதுவானாலும் செய்து தருகிறேன், அவைக்கு புதியவர் என்ற தயக்கம் வேண்டாம் என எனக்கு ஊக்கமளித்து கனிவாக பேசினார். அப்போது அவர் எழுவதற்குள் மூத்த அமைச்சர் என்பதால் நானே எழுந்து மனு அளித்தேன். அதன் பிறகும் அவசரமாக வேறு பணிக்கு சென்றேன். உண்மை நிலை இவ்வாறு இருக்க, அவரசத்தில் எடுத்த போட்டோக்கள் வெளியானதால் இந்த சர்ச்சை எழுந்துள்ளது. இது வருத்தமளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.