அமைதியா இருங்க.. 10 வருஷமா ஊடுருவிட்டாங்க.. எல்லாத்தையும் முதல்வர் பார்த்துக்கொள்வார்- டிஆர்பி ராஜா
சென்னை: சமூகநீதிக்கு எதிரான சக்திகள் 10 ஆண்டுகளாக ஊடுருவி ஆங்காங்கே முளைத்தாலும் அடையாளம் காணப்பட்டு களையெடுக்கப்படும் என்று திமுக எம்.எல்.ஏ. டி.ஆர்.பி. ராஜா தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறை சார்பில் கல்வித் தொலைக்காட்சி என்ற பெயரில் டிவி சேனல் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்த தொலைக்காட்சி மாணவர்களுக்கு பெரிதும் உதவியது.
இதனை நிர்வகிப்பதற்கு முதன்மை செயல் இயக்குநர் பதவியை உருவாக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. இது தொடர்பாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு நேர்காணல்கள் நடத்தப்பட்டன. இதில் மணிகண்ட பூபதி என்பவர் கல்வி தொலைக்காட்சியின் CEO ஆக நியமிக்கப்பட்டார்.

கடும் எதிர்ப்பு
இந்துத்துவ சிந்தனை கொண்டவரான மணிகண்ட பூபதியின் நியமனத்துக்கு பத்திரிகை துறையினரும் அரசியல் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக கல்வியியல் துறையின் மூத்த ஊடகவியலாளர் சுசி திருஞானம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றையே எழுதினார். அதில் மணிகண்ட பூபதியின் நியமனத்துக்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஸ்டாலினுக்கு பறந்த கடிதம்
"சமத்துவம், சமூக நீதி தத்துவங்களில் புடம்போடப்பட்ட என்னை திட்டமிட்டு தவிர்த்து விட்டு, கோமிய கோட்பாட்டாளரை (மணிகண்ட பூபதி) கல்வி டிவி-யின் தலைமைப் பொறுப்பில் நியமித்தது யார்? தமிழக அரசின் கல்வி சார்ந்த முடிவுகள் நாக்பூரில் இருந்து எடுக்கப்படுகின்றனவா? மீண்டும் அடிமைப்படவா பெற்றோம் சுதந்திரம்? இதற்காகவா தமிழ்நாட்டின் ஆக்கபூர்வ ஊடகவியலாளர்கள் இரவுபகலாக உழைத்தோம்? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

ஜவாஹிருல்லா
இதுகுறித்து மமக எம்.எல்.ஏ. ஜவஹாருல்லா விடுத்துள்ள அறிக்கையில், "தமிழகத்தில், வலதுசாரி சிந்தனைக் கொண்ட ஒருவரை மாணவர்களுக்குக் கல்வி அறிவூட்டும் தொலைக்காட்சிக்கு முதன்மை செயல் அலுவலராக நியமனம் செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. சமூகநீதி மற்றும் சமத்துவத்தில் அக்கறையும் ஆர்வமும் கொண்ட பல கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட தகுதிமிக்க ஆளுமைகள் தமிழகத்தில் உள்ளபோது தொடர்ந்து சமூகநீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிராகக் கருத்துகளை மக்கள் மத்தியில் பரப்பும் ஊடகங்களில் பல ஆண்டுகள் பணியாற்றிய ஒருவரைக் கல்வித் தொலைக்காட்சிக்கு முக்கிய அதிகாரியாக நியமித்திருப்பது ஏற்புடையது அல்ல." என்று குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video

டிஆர்பி ராஜா
கடும் எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து மணிகண்ட பூபதியின் நியமனத்தை நிறுத்தி வைக்க தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உத்தரவிட்டு இருக்கிறார். இந்த நிலையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள திமுக எம்.எல்.ஏ. டிஆர்பி ராஜா, "கடந்த 10 ஆண்டுகளில் மெல்ல மெல்ல ஊடுருவிய சமூக நீதிக்கு எதிரான சக்திகள் ஆங்காங்கே அவ்வப்போது முளைத்தாலும் அவை அடையாளம் காணப்பட்டு, களையெடுக்கப்படும். உங்களில் ஒருவர்-உங்களைப் போலவே சிந்திப்பவர்தான் நம் முதல்வர். அமைதியாக இருங்கள். சிறந்து எதுவென முதல்வருக்கு தெரியும்." என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications