இந்தி படிச்சுட்டு கட்டிட வேலைதான் செய்யுறாங்க.. எங்க முன்னேறி இருக்காங்க? தயாநிதி மாறன் பொளேர்
சென்னை: வட இந்தியாவில் இந்தி படிச்சுட்டு தமிழகத்தில் கட்டிட வேலைதான் செய்யுறாங்கப்பா; இந்தியில் படித்தவர்கள் முன்னேறவில்லை; ஆனால் தமிழ், ஆங்கிலத்தில் படித்தவர்கள் உலகின் முன்னணி நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் இருக்கின்றனர் என்று திமுக எம்.பி. தயாநிதி மாறன் கடுமையாக சாடியுள்ளார்.
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தயாநிதி மாறன் பேசியதாவது: பல ஆண்டுகள் கழித்து ஆயிரம்விளக்கு பொதுக் கூட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிரது. இந்தியாவில் பிற மாநிலங்களில் சிபிஎஸ்இ பிரபலமாக இருக்கிறதே? ஏன் தமிழகத்தில் பிரபலமாக இல்லை? என்கிற கேள்வியை கேட்கலாம். தமிழகத்தில் மட்டும்தான் மாநில அரசு பள்ளிகள் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன. மற்ற மாநிலங்களில் அரசு பள்ளிகள் எண்ணிக்கை அப்படி இல்லை.
பள்ளி மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வளர்க்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்ற போது முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை நேரில் சந்தித்து அம்மாநில பள்ளிகளை ஆய்வு செய்தார். மத்திய அரசின் கேந்திரிய வித்யா பள்ளிகளுக்கு இணையாக நமது அரசுப் பள்ளிகளை உருவாக்க மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திட்டம் வைத்துள்ளதாக கூறியிருக்கிறார்.
ஆயிரம் விளக்கு தொகுதி என்னுடைய மத்திய சென்னை தொகுதிக்குள் இருக்கிறது. ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ. பல்வேறு நலத்திட்டங்களை செய்திருக்கிறார். அப்படி அவர் செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனென்றால் நாங்கள் தேர்தலில் ஜெயிக்க எளிதாக இருக்கும் என்பதுதான்.

பாஜக அரசின் இந்தி திணிப்பு
சிலருக்கு தெலுங்கு தாய் மொழியாக இருக்கலாம். சிலருக்கு மலையாளம் தாய்மொழியாக இருக்கலாம். ஆனால் அனைவரும் தமிழ்நாட்டில் இருப்பதால் அனைவரும் தமிழை தாயாக ஏற்றுக் கொண்டு அண்ணன் சகோதரனாக இருக்கின்றோம். ஆனால் ஒவ்வொருமுறையும் மத்தியில் மதவாத பாஜக அரசு அமையும் போதெல்லாம் இந்தியை திணிக்க வேண்டும் என்று முயற்சிக்கின்றனர்.

அமித்ஷாவுக்கு எதிர்ப்பு
இந்தி படித்தால் முன்னேறலாம்.. முன்னேறலாம் என்கின்றனர்.. ஆனால் இந்தி படிக்க வேண்டும் என்கிற அவாள் எல்லாம் முன்னேறவே இல்லை. அவர்கள் தமிழை இழிவுபடுத்துகின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்கிறார்.. இரண்டு இந்தியர்கள் சந்தித்தால் ஏன் ஆங்கிலத்தில் உரையாடுகிறீர்கள்? இந்தியில் உரையாடுங்கள் என்கிறார். ஏன்யா இந்தியில் உரையாடனும்? தமிழில் உரையாடுங்க.. ஏன் தெலுங்கில் உரையாடுங்க? ஏன் மலையாளத்துல உரையாடலாமே?

உயர் நிலைகளில் தமிழ், ஆங்கிலம் படித்தவர்கள்
நம் பிள்ளைகள், மக்கள் தமிழில் படித்தார்கள்; ஆங்கிலத்தில் படித்தார்கள்...இதன் விளைவு.. உலகத்தின் தலைசிறந்த கூகுள் நிறுவனத்தின் தலைவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்; தமிழ் படித்தார்; ஆங்கிலம் படித்தார்; ஆனால் இந்தி படித்தாரா? இல்லையா? என தெரியாது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஆந்திராவை சேர்ந்தவர். அவர் தெலுங்கு படித்தவர். ஆங்கிலம் படித்தார் தலைசிறந்த பொறுப்பில் இருக்கிறார். பெப்சி கோலா நிறுவன தலைவர் இந்திரா நூயி.. அவர் நம் தியாகராயர் நகரைச் சேர்ந்தவர். தமிழ், ஆங்கிலத்தில் படித்தவர்கள் பல உயர் பொறுப்பில் இருக்கின்றனர்.

இந்தி படித்தவர்கள் நிலைமை
ஆனால் இந்தி படித்தவர்கள் எங்கே இருக்கின்றனர்? தமிழகத்தில் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் வட இந்திய மாநிலத்தவர்.. இந்தி படித்தவர்கள். வட மாநிலத்தில் இந்தியில் படித்துவிட்டு வேலைவாய்ப்பு இல்லாமல் கட்டிடத் தொழிலுக்கு வருகின்றனர். இந்தியில் படித்தால் முன்னுக்குப் போகலாம்.. முன்னுக்குப் போகலாம் என்கிறீர்கள்.. ஆனால் யாரும் முன்னுக்கு வந்தது போல் இல்லையே. நாங்கள் இந்திக்கு எதிரானவர்கள் இல்லை. ஆனால் எங்கள் மீது எந்த மொழியையும் திணிக்காதீர்கள். இந்தியா வளரவேண்டுமானால் அனைத்து தாய்மொழிகளும் தனித்துவத்துடன் விளங்க வேண்டும். அதைவிட்டுவிட்டு ஒரே நாடு, ஒரே மொழி என்பதெல்லாம் நாட்டின் வளர்ச்சிக்கு உதவாது. இவ்வாறு தயாநிதி மாறன் பேசினார்.












Click it and Unblock the Notifications