பொங்கல் அன்று சி.ஏ தேர்வு.. பாஜக அரசு தமிழர்களின் உணர்வுகளில் விளையாடுகிறது.. கனிமொழி ஆவேசம்!
சென்னை: பாஜக அரசு தமிழர்கள் உணர்வுகளில் விளையாடிக் கொண்டிருக்கிறது என திமுக எம்.பி கனிமொழி காட்டமாக விமர்சித்துள்ளார். பொங்கல் பண்டிகை அன்று சி.ஏ தேர்வு நடத்தப்படுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் கனிமொழி.
வரும் ஜனவரி மாதம் 14 ஆம் தேதி தமிழர் திருநாள் பண்டிகையான பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் அன்றைய தினம் சாட்டர்டு அக்கவுண்டன்ட் (CA) தேர்வு நடத்தப்பட உள்ளது. பொங்கல் பண்டிகை நாளன்று இதுபோன்று அரசு தேர்வுகள் நடத்தப்பட்டால், தேர்தவர்கள் சிரமத்திற்கு ஆளாவார்கள். மத்திய அரசு திட்டமிட்டே அன்றைய தேதிகளில் நுழைவுத் தேர்வுகளை நடத்துவதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

நாட்டின் முக்கியமான தேர்வுகளில் ஒன்றாக கருதப்படும் சிஏ தேர்வுகள் தமிழகத்தில் 28 மையங்களில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு, தேர்வுகள் நடைபெறும் தேதி அட்டவணை அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
2025 ஆம் ஆண்டு ஜனவரி 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் சி.ஏ பவுண்டேஷன் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையின்போது நடத்தப்படும் இந்த இரு தேர்வுகளையும் வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என தேர்வகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், திமுக மக்களவைக் குழுத் தலைவர் கனிமொழி இதுதொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக எம்.பி கனிமொழி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டு மக்கள் அனைவராலும் கொண்டாடப்படும் கலாச்சார திருவிழாவான பொங்கல் அன்று CA பிரிலிம்ஸ் தேர்வு நடத்தும் ICAI இன் முடிவு, நமது அடையாளம் மற்றும் பாரம்பரியத்தின் மீதான திட்டமிட்ட தாக்குதல். தமிழ் மரபுகள் மற்றும் மாநில சுயாட்சி மீதான அவர்களின் அலட்சியத்தையே இது பிரதிபலிக்கிறது. தேர்வு தேதியை உடனடியாக ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மத்திய அரசு கூறுவது போல் தமிழர் உணர்வுகளை அவர்கள் உண்மையாக மதிக்கும் பட்சத்தில், தேர்வை மாற்றியமைக்க கார்ப்பரேட் விவகார அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும். நமது கலாச்சார பன்முகத்தன்மையைக் குலைத்து, பெரும்பான்மையான தமிழர் உணர்வை நசுக்கும் முடிவுகளை மத்திய அரசு திணிப்பதை நிறுத்த வேண்டிய நேரம் இது.” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்.பி, “சி.ஏ பிரிலிம்ஸ் தேர்வு பொங்கலன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக அரசு தமிழர்கள் உணர்வுகளில் விளையாடிக் கொண்டிருக்கிறது. தேர்வு தேதியை மாற்ற தொடர்ந்து போராடுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சிஏ தேர்வு தேதியை மாற்றும்படி மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொங்கல் பண்டிகையின் போது CA தேர்வுகள் நடைபெறுவது தமிழகத்தைச் சேர்ந்த தேர்வர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். தமிழர் திருநாளை சிறப்பாக கொண்டாட ஏதுவாக தேர்வுக்கான அட்டவணையை மாற்றியமைக்க வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications