"தேங்ஸ்".. அக்கா, உங்களுக்கு ஒன்னும் வராது.. பதவியேற்புக்கு வாங்க.. கனிமொழிக்கு குவியும் வாழ்த்து
திமுக எம்பி கனிமொழியின் ட்வீட் வைரலாகி வருகிறது
சென்னை: திமுக எம்பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.. இதையடுத்து, தான் ஆஸ்பத்திரியில் நலமுடன் இருப்பதாகவும், தன்னை விசாரித்த அனைவருக்கும் நன்றி என்றும் கனிமொழி தெரிவித்துள்ளார்..
இந்த முறை கனிமொழி தீவிரமான பிரச்சாரத்தை ஆரம்பத்தில் இருந்தே முன்னெடுத்தார்.. தேர்தல் பிரச்சாரத்துக்கு நம்ம ஊரில் ஸ்டாலின், கிராம சபை போன்ற கூட்டங்களையும் தமிழகம் முழுக்க சென்று நடத்தி வந்தார்.. தேர்தல் தேதி நெருங்க நெருங்க, கனிமொழியின் பிரச்சாரமும் அனல் அடித்தது.
இந்த சமயத்தில்தான் தமிழகத்தில் கொரோனா தாக்கமும் அதிகமானது.. தேர்தல் பிரச்சாரத்திற்கு இடையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டும் வந்தது. இதில் கனிமொழியும் பாதிக்கப்பட்டுள்ளார்.. தற்போது, சென்னையில் உள்ள அப்போலோ ஆஸ்பத்திரியில் தன்னை அனுமதித்துக் கொண்டார்.. இதையடுத்து, கனிமொழியின் அனைத்து பிரச்சாரக் கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டன.
கனிமொழி
இப்போது கனிமொழி ஒரு ட்வீட் போட்டுள்ளார்.. அதில், "எனக்கு கோவிட்- 19 தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். மருத்துவமனையில் எனக்குத் தேவையான மருத்துவ உதவிகள் அளிக்கப்படுகின்றன. எனது உடல் நலன் குறித்து அக்கறையுடன் விசாரித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி!" என்று தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார்.
நிம்மதி
இந்த 2 நாட்களாக கனிமொழி எப்படி இருக்கிறார் என்று தொண்டர்கள் தவித்து கிடந்த நிலையில், இந்த ட்வீட் அவர்களுக்கு ஒரு நிம்மதியை தந்துள்ளது.. அத்துடன், சீக்கிரம் குணமடைந்து வர வேண்டும் என்று கனிமொழிக்கு தங்கள் வாழ்த்துக்களையும் உரிமையாக தெரிவித்து வருகின்றனர்..!
கனிமொழி
"கனிமொழி அக்கா உங்களுக்கு இறைவன் அருளால் ஒன்னும் வராது..... நீங்கள் நீண்ட ஆயுளுடன் நிறைந்த சுகத்துடன் இருப்பீர்கள்... அதற்கு இறைவன் அருள்புரிவான்... அடுத்து நீங்கள் தான் திமுகவை வழிநடத்தும் திறன்கொண்டவர்... வாழ்த்துக்கள் அக்கா" என்றும், "கழகத்தின் வெற்றிக்காகக் கடும் வெயிலிலும் மக்கள் கடலில் புயலாய், சூறாவளியாய், சில நேரங்களில் தென்றலாய், மக்களிடம் கனிவாய் களமாடிய தாங்கள், கொரோனா தொற்றிலிருந்து மீண்டு விரைவில் நலமடைய வாழ்த்துக்கள்" என்றும் பதிவிட்டுள்ளனர்.
ஆச்சரியம்
மேலும் சிலர், "மக்கள் வெள்ளத்தினிடையே பரப்புரை மேற்கொண்ட சகோதரிக்கு கோவிட் -19 உறுதிப்படுத்தியதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை, பரப்புரையில் உங்கள் மீது மக்கள் காட்டிய அன்பும், வாழ்த்தும் தொற்றிலிருந்து வெகு விரைவில் மீண்டு வருவீர்கள், கவலை கொள்ள வேண்டாம்" என்றும், கடுமையாக உழைத்தீர்கள், உடல் நலம் பேணுங்கள் நன்கு ஓய்வு எடுங்கள்.தளபதியின் பதவியேற்புக்கு வாருங்கள் தங்கையே" என்றும் வாழ்த்துக்கள் குவிகிறது.