பெரும்பிடுகு முத்தரையர் பிறந்தநாள் விழா! வீர வாள் ஏந்தி நின்ற கனிமொழி! பின்னணி என்ன?
சென்னை: பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்தநாள் விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட கனிமொழிக்கு வீரவாள் பரிசாக அளிக்கப்பட்டது.
திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பரலூர், மதுரை என 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் முத்தரையர் சமுதாய மக்கள் அரசியலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்க கூடிய இடத்தில் இருக்கின்றனர்.
குறிப்பாக திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் முத்தரையர் சமுதாய மக்களின் ஆதரவை பெற அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் நேரத்தில் போட்டிபோடும்.

முத்தரையர் பிறந்தநாள்
பேரரசன் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. திருச்சி ஒத்தக்கடையில் உள்ள முத்தரையர் சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கே.என்.நேரு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிலையில் தலைநகர் சென்னையில் நடைபெற்ற முத்தரையர் பிறந்தநாள் விழாவுக்கு திமுக மகளிரணிச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

அரசியல் ரீதியாக
இது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக பார்க்கப்படுகிறது. முத்தரையர் சமுதாய சங்கத்தினர் கனிமொழிக்கு இந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவரை அழைத்து முத்தரையர் பிறந்தவிழாவை நடத்தியிருக்கிறார்கள் என்றால் அதன் பின்னணியில் அரசியலும் இருப்பதாகவே கருதப்படுகிறது. ஆள் உயர ரோஜாப்பூ மாலை, வீர வாள் என கனிமொழிக்கு கொடுத்து அவரை சிறபித்த நிகழ்வும் நடந்துள்ளது.

அமைச்சர் மெய்யநாதன்
முத்தரையர் சமுதாயப் பிரதிநிதியாக தமிழக அமைச்சரவையில் மெய்யநாதன் இடம்பெற்றிருந்தாலும் கூட, அவரைக் காட்டிலும் கனிமொழிக்கு முத்தரையர் சமுதாய மக்கள் கொடுத்த முக்கியத்துவம் அரசியல் ரீதியாக பேசு பொருளாக உள்ளது. குறிப்பிட்ட ஒரு அடையாளத்திற்குள் சிக்கி குறுகிய எல்லைக்குள் அரசியல் செய்ய விரும்பாத கனிமொழி, இனி வரும் நாட்களில் இது போன்ற பல நிகழ்ச்சிகளில் மேடையேறும் திட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கனிமொழி பேச்சு
பேரரசன் பெரும்பிடுகு முத்தரையர் குறித்து பேசிய கனிமொழி சமஸ்கிருத மொழியை உயிர்பிக்க மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை பட்டியலிட்டார். பேசவே ஆள் இல்லாத ஒரு மொழியாக சமஸ்கிருதத்திற்கு மத்திய அரசு கோடி கோடியாக பணம் செலவழித்து வருவதாக வேதனைத் தெரிவித்தார். மேலும் தமிழின் தொன்மையையும் சிறப்பையும் பற்றி அந்த நிகழ்ச்சியில் பேசினார்.












Click it and Unblock the Notifications