அணைகள் பாதுகாப்பு தொடர்பாக சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை - ஹைகோர்ட்டில் திமுக வழக்கு
மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து திமுக எம்பி ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை: மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து திமுக எம்பி ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மாநில அரசின் அதிகார வரம்பில் உள்ள அணைகள் பாதுகாப்பு தொடர்பாக சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை என்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசு அணைகள் பாதுகாப்பு சட்டத்தை லோக்சபாவில் நிறைவேற்றியது இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த சட்டம் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.

கூட்டாட்சித் தத்துவத்திற்கும், மாநில அரசின் அதிகாரங்களுக்கும் எதிரான அணைப் பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு பிடிவாதமாக நிறைவேற்றி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று மு.க ஸ்டாலின் தெரிவித்திருந்தார். தி.மு.க. எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோதும் இப்போது ஆளுங்கட்சியாகவும் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்து வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சட்டத்தை எதிர்த்து திமுக எம்பி ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், மாநில அரசின் அதிகார வரம்பில் உள்ள அணைகள் பாதுகாப்பு தொடர்பாக சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின் மூலம் தேசிய அணைகள் பாதுகாப்பு குழு மற்றும் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் ஆகிய இரண்டு அமைப்புகளை ஏற்படுத்தி நாடு முழுவதும் உள்ள முக்கிய அணைகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்கும் வகையில் மத்திய அரசு இந்த சட்டத்தை நிறைவேற்றி உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் ஏற்பட்டுள்ள இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் பொறுப்பு தலைமை நீதிபதி முனிஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் முறையீடு செய்தார்.
இந்த முறையீட்டை ஏற்று நீதிபதிகள் இந்த வழக்கை ஜனவரி 10ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications