தமிழ்நாட்டுக்கு வாங்க! ஏக்நாத் சிண்டேவை சந்தித்த திமுக எம்பி.. “தம்பி” சிலையை கொடுத்து அழைப்பு
சென்னை: மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்துகொள்ளுமாறு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்து திமுக மக்களவை உறுப்பினர் தருமபுரி செந்தில்குமார் அழைப்பு விடுத்து இருக்கிறார்.
44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் ஜூலை 28 ஆம் தேதி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கிறது.
ஆகஸ்டு 10 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஏராளமான சர்வதேச வீரர்கள் கலந்துக்கொள்ள உள்ளனர்.

செஸ் ஒலிம்பியாட்
போட்டி நடைபெறும் மாமல்லபுரத்தில் அதற்கு ஏற்பாடும் விரைவாக நடந்து வருகின்றன. தமிழ்நாடு அரசின் நிதிப்பங்களிப்புடன் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ள இந்த போட்டியை பிரபலப்படுத்தும் பணிகளில் தமிழ்நாடு அரசு இறங்கி இருக்கிறது. இந்த போட்டியை மேலும் பிரபலமாக்கும் வகையில் விளம்பர படம் ஒன்றையும் தயாரித்து உள்ளது தமிழ்நாடு அரசு.

விளம்பரம்
பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கிய இந்த விளம்பர படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் நடித்து உள்ளார். இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் இந்த விளம்பர படத்தில் நடனமாடி இருக்கிறார். இந்த விளம்பர படத்தின் டீசரை நடிகர் ரஜினிகாந்த் கடந்த 15 ஆம் தேதி வெளியிட்டார்.

நேப்பியர் பாலம்
சென்னை நேப்பியர் பாலத்தில் இதற்காக சதுரங்க தரைபோல் வடிவமைக்கப் பட்டு சதுரங்க காய்களுக்கு மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடந்து வருவதைபோன்றும், கருப்பு வெள்ளை நிற ஆடையணிந்தவர்கள் நடனமாடுவதை போன்றும் இது படமாக்கபட்டது. இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் இதில் சில வினாடிகள் தோன்றுகிறார். அதிதி ஷங்கர் மாமல்லபுரத்தில் நாட்டியமாடுகிறார்.

பிரதமர் மோடிக்கு அழைப்பு
இந்த போட்டியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 28 ஆம் தேதி சென்னை வர உள்ளார். இந்த நிலையில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, திமுக எம்.பி. கனிமொழி, தமிழ்நாடு அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து செஸ் ஒலிம்பியாட் லட்சினையான "தம்பி" என பெயரிடப்பட்டு உள்ள குதிரை சிலையை வழங்கினர்.

ஏக்நாத் ஷிண்டேவுக்கு அழைப்பு
இதேபோல் பல்வேறு மாநில முதலமைச்சர்களுக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அண்மையில் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக பதவியேற்ற ஏக்நாத் ஷிண்டேவை தருமபுரி திமுக எம்.பி. செந்தில்குமார் நேரில் சந்தித்து "குதிரை" வடிவிலான தம்பி சிலையை வழங்கி செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு அழைப்பு விடுத்தார்.












Click it and Unblock the Notifications