Exclusive: திருச்சி சிவா மகன்.. பாஜக அடக்கி வாசிக்கனும்! "டெவலப்மெண்ட்" நடக்க போகிறது-செந்தில்குமார்
சென்னை: பாஜக எம்.எல்.ஏ.க்கள் இரண்டு பேர் திமுகவுடன் தொடர்பில் இருப்பதாக தாம் பதிவிட்ட ட்வீட் உண்மையானது என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
உண்மையில்லாத தகவலை எப்போதும் தாம் வெளியிடமாட்டேன் என்றும் இது தொடர்பாக தற்போதைய சூழலில் மேலும் பேச விரும்பவில்லை எனவும் கூறினார். பாஜக எம்.எல்.ஏ.க்கள் திமுகவுடன் தொடர்பில் இருப்பது குறித்து பல ஊடகங்கள் தன்னை தொடர்பு கொண்டு கேட்டு வருவதாகவும் ஆனால் யாரிடமும் இது குறித்து தாம் மேலும் பேச விரும்பவில்லை எனவும் கூறினார்.

செந்தில்குமார் எம்.பி.
தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவு பாஜகவின் தேசிய தலைமை வரை கவனம் ஈர்த்திருப்பதுடன் அரசியல் வட்டாரத்திலும் பேசு பொருளாகவும், விவாத தலைப்பாகவும் மாறியுள்ளது. தமிழகத்தில் பாஜகவுக்கு 4 எம்.எல்.ஏ.க்கள் உள்ள நிலையில் இரண்டு எம்.எல்.ஏ.க்கள் திமுகவுடன் தொடர்பில் இருப்பதாக கூறி பாஜக மாநில தலைமையின் தூக்கத்தை தொலைக்க வைத்துள்ளார் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார். இதனிடையே இந்த ட்வீட் தொடர்பாக நாம் அவரிடமே பேசினோம். அப்போது அவர் நம்மிடம் கூறியதாவது,

100% உண்மை
"நான் போட்ட ட்வீட் பற்றி உங்களை போல் பல்வேறு ஊடகங்களில் இருந்து என்னை தொடர்பு கொண்டு பேசினார்கள். நான் இது தொடர்பாக தற்போதே மேலும் பேசினால் அது சரியாக இருக்காது. நான் ட்வீட்டரில் போட்ட தகவலோடு இப்போது போதும் என நினைக்கிறேன். பாஜக எம்.எல்.ஏ.க்கள் இருவர் திமுகவுடன் தொடர்பில் இருப்பதாக நான் கூறியது நூறு சதவீதம் உண்மை. இல்லையென்றால் அந்த பதிவையே நான் வெளியிட்டிருக்க மாட்டேன்.''

திருச்சி சிவா மகன்
''திருச்சி சிவா மகன் சூர்யா திமுகவில் எந்தப் பொறுப்பிலும் இல்லை. இதனால் அவர் பாஜகவில் சேர்ந்தது பற்றி நான் கருத்துக் கூற ஒன்றுமில்லை. எங்க கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லாத ஒருவர் தங்கள் கட்சியில் இணைவதற்கே பாஜகவினர் இப்படி விளம்பரம் கொடுக்கின்றனர். பாஜக அடக்கி வாசிக்க வேண்டும். விரைவில் நான் போட்ட ட்வீட் தொடர்பான டெவலப்மெண்ட்கள் நடக்கும் போது உங்களிடம் மேலும் பேசுகிறேன்" எனக் கூறினார் திமுக எம்.பி.செந்தில்குமார்.

தமிழக அரசியல்
இதனிடையே திமுக எம்.பி.யின் ட்விட்டர் பதிவு விவகாரம் பாஜக உட்பட தமிழக அரசியல் களத்தில் அனல் பறக்கும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக எம்.பி.யின் புதிருக்கு விடை கண்டறியும் பணியில் பாஜக மேலிடம் இறங்கியிருப்பதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications