சுபம்! அண்ணாமலை "அப்படி" சொல்ல.. திடீர்ன்னு திமுக என்ன "இப்படி" சொல்லுதே.. ஒன்னும் புரியலையே!
சென்னை: மத்திய அமைச்சர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து ஆய்வு செய்வதை திமுக எம்பி டிஆர் பாலு வரவேற்று உள்ளார்.
அடுத்த 30 நாட்களில் 76 மத்திய அமைச்சர்கள் தமிழ்நாடு வர உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருந்தார். தமிழ்நாட்டில் ஆய்வு செய்யவும், மத்திய அரசின் நலத் திட்டம் மக்களுக்கு செல்கிறதா என்பதை அறிந்து கொள்வதற்காகவும் அவர்கள் தமிழ்நாடு வருவதாக அண்ணாமலை குறிப்பிட்டு இருந்தார்.
அண்ணாமலையின் இந்த பேச்சு கடும் விவாதங்களை ஏற்படுத்தியது. அதிமுக துணை பொதுச்செயலாளர் கேபி முனுசாமி இதற்கு வெளிப்படையாகவே கண்டனம் தெரிவித்திருந்தார்.

அமைச்சர்கள்
இதையடுத்து தமிழ்நாடு வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தமிழகத்தில் வழங்கப்படும் ரேசன் அரிசி தரம் குறித்து கடுமையாக விமர்சித்தார். குடும்ப அரசியலை அனுமதிக்க கூடாது. பாஜக குடும்ப அரசியல் செய்யும் கட்சி இல்லை என்றும் குடும்ப அரசியல் செய்யும் ஆட்சியை அகற்றியே ஆக வேண்டும் என்றார். தமிழ்நாட்டில் ரேஷன் அரிசி தரமாக இல்லை. மத்திய அரசு திட்டங்களில் மோடியின் படத்தை இவர்கள் பயன்படுத்துவது இல்லை.

அண்ணாமலை
பிரதமர் மோடியைத் தரம் குறைந்த வார்த்தைகளில் விமர்சிக்கிறார்கள், என்று பியூஷ் கோயல் கூறினார். ஆய்விற்கு வந்துவிட்டு அமைச்சர் பியூஷ் இப்படி அரசியல் பேசியது பெரிய அளவில் சர்ச்சையானது. ; அவரின் பேச்சுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அதேபோல் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், இணை அமைச்சர்கள் ராமேஸ்வர் டெலி ஆகியோர் தமிழ்நாட்டில் வந்து ஆய்வுகளை செய்தனர்.

டி ஆர் பாலு
இந்த நிலையில் மத்திய அமைச்சர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து ஆய்வு செய்வதை திமுக எம்பி டிஆர் பாலு வரவேற்று உள்ளார். சென்னை நந்தனத்தில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தேவர் சிலைக்கு மரியாதை செய்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒன்றிய அமைச்சர்கள் தமிழ்நாடு வந்து ஆய்வு செய்கிறார்கள். அவர்கள் நிர்வாக காரணங்களுக்காக தமிழ்நாடு வருகிறார்கள். அவர்கள் எல்லா மாநிலங்களுக்கும் அமைச்சர்கள். தமிழ்நாட்டிற்கும் சேர்ந்துதான் அவர்கள் ஒன்றிய அமைச்சர்கள்.

திமுக
ஒன்றிய அமைச்சர்கள் தமிழ்நாடு வருவதை நான் வரவேற்கிறேன். நிர்வாக காரணங்களுக்காக ஒன்றிய அமைச்சர்கள் தமிழ்நாடு வருவதை தவறு என்று கூற முடியாது. இதுபோன்ற ஆய்வுகளை நான் வரவேற்கிறேன் என்று டி. ஆர் பாலு கூறி உள்ளார். மத்திய அமைச்சர்களின் தமிழ்நாடு வருகை கடும் விமர்சனங்களையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தி உள்ள நிலையில் டி. ஆர் பாலு அளித்துள்ள இந்த பேட்டி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.











Click it and Unblock the Notifications