6 மாதங்களுக்கு முன்னரே நாடாளுமன்ற தேர்தல்.. பாஜகவின் மாஸ்டர்பிளான்.. "சீக்ரெட்டை" சொன்ன டிஆர் பாலு
சென்னை: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதை தடுக்க நாடாளுமன்ற தேர்தல் 6 மாதங்களுக்கு முன்னதாகவே நடத்தப்படலாம் என்று திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
எதிர்வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் ஆளும் பாஜக எதிர்க்கட்சி காங்கிரஸ் என இரு தரப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பாஜகவை பொறுத்த அளவில், அதன் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவை கொண்டாட பாஜக ஆட்சி பொறுப்பில் இருக்க வேண்டும். அதற்கு இந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ஆட்சியை பிடிக்க வேண்டும். 2025ம் ஆண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது.

அதேபோல இந்த முறையும் பிரதமராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டால் நேருவுக்கு பின்னர் தொடர்ந்து 3 முறை பிரதமராக பதவிவகித்தவர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரராக ஆவார். எனவே இந்த முறை எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று பாஜக முயன்றுக்கொண்டிருக்கிறது. காங்கிரஸுக்கும் ஏறத்தாழ இதே நிலைமைதான். கடந்த இரண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் கட்சி தோல்வியடைந்துள்ளதால் அதன் முக்கியமான தலைவர்கள் பலர் கட்சியிலிருந்து வெளியேறியுள்ளனர்.
எனவே கட்சியை இந்த சரிவிலிருந்து மீட்க இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும். அப்போதுதான் கட்சி மீது மக்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நம்பிக்கை பிறக்கும். எனவே இதற்காக பாரத் ஜடோ யாத்திரை, அதானி விவகாரம் என பல விஷயங்களில் தீவிரமாக இயங்கி வருகிறது. அதேபோல திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கவும் முயன்று வருகிறது. இந்நிலையில் பாஜகவின் தேர்தல் வியூகம் குறித்து திமுக சந்தேகித்திருக்கிறது.

அதாவது, "எதிர்க்கட்சிக்ள ஒன்றிணைவதை தடுக்க நாடாளுமன்ற தேர்தல் 6 மாதங்களுக்கு முன்னதாகவே நடத்தப்படலாம்" என்று திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார். சென்னை ஆலந்தூரில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றியிருந்த டி.ஆர்.பாலு மேற்குறிப்பிட்டவாறு கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,
"நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் இருப்பதாக நினைக்க கூடாது. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதை தடுக்க பாஜக எந்த திட்டத்தை வேண்டுமானாலும் போடலாம். அந்த வகையில் நாடாளுமன்ற தேர்தல் திட்டமிடப்பட்டதை விட 6 மாதங்களுக்கு முன்னரே கூட நடத்தப்படலாம். எனவே திமுவினர் இப்போதிலிருந்தே இதற்கு அமைப்புடன் தயாராக வேண்டும்" என்று கூறியுள்ளார். இவரைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் அன்பரசன்,
"மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் பாஜக இருப்பதால் வரும் தேர்தல் மிக கடுமையாக இருக்கும். அவர்கள் தங்கள் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். ஒருபுறம் தமிழ்நாடு வளர்ந்த மாநிலம் என்று பேசுகிறார்கள். ஆனால் மறுபுறம் மண்ணெண்ணைய் விநியோகத்தை நிறுத்தியுள்ளார்கள். விலைவாசி, கேஸ் சிலிண்டர், பெட்ரோல் டீசல் விலையுயர்வு என மக்களின் அடிப்படை பிரச்னைகளையும் அதற்கான காரணத்தையும் திமுகவின் மகளிர் அணியின் பெண்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
காங்கிரசுடன் திமுக, இடதுசாரிகள் மற்று ஒரு சில கட்சிகள் கைக்கோர்க்க தயாராக இருந்தாலும் ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் விலகியே இருக்கின்றன. 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்திகளாக இந்த கட்சிகள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications