டிஆர் பாலு வழக்கு.. அண்ணாமலைக்கு ஓராண்டு சிறை தண்டனை கிடைக்கும்.. ஆர்எஸ் பாரதி பரபரப்பு பேட்டி
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக திமுக எம்பி டிஆர் பாலு அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அண்ணாமலை தனனை பற்றி அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை வெளியிட்டதாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் டிஆர் பாலு வழக்கு தொடர்ந்துள்ளார்.
திமுகவினர் சொத்துபட்டியல் என்று கடந்த ஏப்ரல் 14ம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருந்தார். அந்த பட்டியலில் டிஆர் பாலு குடும்பத்திற்கு பல ஆயிரம் கோடி சொத்து இருப்பதாக அண்ணாமலை குற்றம்சாட்டி இருந்தார்.

இதையடுத்து டிஆர் பாலு, அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், தற்போது வழக்கு தொடர்ந்துள்ளார். தன்னை பற்றி அடிப்படை ஆதாரமில்லாத தகவல்களை அண்ணாமலை வெளியிட்டதாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் டிஆர் பாலு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி கூறுகையில், அடிப்படை ஆதரமாற்ற குற்றச்சாட்டுகளை கூறி அண்ணாமலை, அந்த குற்றச்சாட்டுக்களை திரும்ப பெற வேண்டும், மன்னிப்பு கோர வேண்டும் என்று திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் சார்பிலும், திமுக பொருளாளர் டிஆர் பாலுவின் சார்பிலும் நோட்டீஸ் அனுப்பி ஏறத்தாழ ஒரு மாதம் ஆகியும் இதுவரையிலே, அண்ணாமலை பதில் சொல்லவில்லை. பதில் என்றால் அறிக்கை விடுகிறார்.. அதுவேறு.. ஆனால் எங்களது சட்ட ரீதியான நோட்டீஸ்க்கு பதில் அளிக்கவில்லை.
போதுமான அவகாசம் கொடுத்தும் அண்ணாமலை மன்னிப்பு கேட்காததாலும், அவர் சொன்ன வாசகங்களை திரும்ப பெறாத காரணத்தினால், இரண்டு நாட்களுக்கு முன்னதாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சார்பிலே சென்னை செசன்ஸ் கோர்டில் மாவட்ட வழக்கறிஞர் தேவராஜன் மூலம் அண்ணாமலை மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து கழகத்தினுடைய பொருளாளர் டிஆர் பாலுவுக்காக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 14வது அமர்வு முன்பாக வழக்கறிஞர் ரிச்சர்ட் அவர்கள், திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் அவதூறு வழக்கு தாக்கல் செய்திருக்கிறார். திராவிட முன்னேற்ற கழகம் பொதுவாக யார் மீதும் பொய் வழக்கு போட்டு பழக்கம் கிடையாது. 1970களிலேயே திமுக தலைவர் கருணாநிதி அவதூறு வழக்கு தாக்கல் செய்து வெற்றியும் பெற்றார் என்றும், அதில் ஒருவருக்கு ஓராண்டு சிறை தண்டனை கிடைத்தது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை உறுதியாக கிடைக்கும். சட்ட ரீதியாக தற்போது வரை அண்ணாமலை எந்த பதிலும் அளிக்கவில்லை. திமுக தொடர்ந்த அனைத்து வழக்குகளிலும் வெற்றி பெற்றுள்ளது வரலாறு." இவ்வாறு ஆர்எஸ் பாரதி கூறினார்.












Click it and Unblock the Notifications