ஸ்டாலின் முன்பு திரண்ட திமுக எம்.பிக்கள்.. நாடாளுமன்ற கூட்டத்தொடர் பிளான் பற்றி ஆலோசனை!
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. இதில் வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் எழுப்ப வேண்டிய பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் 2 மாதங்களுக்கு ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பெறப்படும் பணி அறிக்கை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருப்பப் பணிகளுக்கு மத்தியில் நாடாளுமன்றம் கூடுகிறது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நடைபெறும் இந்த கூட்டத் தொடரில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இன்று (நவம்பர் 29) திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
முன்னதாக இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில்,'திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், 29 ஆம் தேதி காலை 10 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம், 'முரசொலி மாறன் வளாகத்தில்' உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும். அதுபோது, திமுக மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்,' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
வரும் திங்கட்கிழமை நாடாளுமன்றம் தொடங்க உள்ள நிலையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடந்து வருகிறது. நாடாளுமன்றத்தில் கோவை, மதுரை மெட்ரோ திட்டங்கள் நிராகரிப்பு, எஸ்.ஐ.ஆர் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்புவது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்தக் கூட்டத்தில் 2 மாதங்களுக்கு ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பெறப்படும் பணி அறிக்கை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.












Click it and Unblock the Notifications