அண்ணா அறிவாலயத்தில் திமுக முப்பெரும் விழா... 6 மாதத்திற்கு பிறகு நடைபெறும் முதல் நிகழ்ச்சி...!
சென்னை: திமுக முப்பெரும் விழா செப்டம்பர் 15-ம் தேதி அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என அக்கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முப்பெரும் விழாவில் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது பெறுபவர்களின் பட்டியலையும் திமுக வெளியிட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து நிகழ்ச்சிகள் மற்றும் சந்திப்புகளை காணொலி வாயிலாக நடத்தி வந்த மு.க.ஸ்டாலின் 6 மாத காலத்திற்கு பிறகு முதல் முறையாக நேரடியாக நடத்த இருக்கிறார்.

ஆண்டுதோறும்
அண்ணா பிறந்தநாள், பெரியார் பிறந்தநாள், திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகிய மூன்று நிகழ்ச்சிகளையும் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 15-ம் தேதி அன்று திமுக முப்பெரும் விழா நடைபெறுவது வழக்கம். கருணாநிதி இருந்தவரை இந்த விழா மிகப் பிரம்மாண்டமாக மாநாடு போன்று நடைபெறும். அவர் மறைவுக்கு பிறகு 2018-ம் ஆண்டு நடைபெற்ற முப்பெரும் விழா மிக எளிமையாக சென்னையில் நடத்தப்பட்டது. கடந்தாண்டு திருவண்ணாமலையில் நடத்தப்பட்டது.

கொரோனா காரணம்
இந்நிலையில் இந்தாண்டு திமுக முப்பெரும் விழாவை மிகப் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கொரோனா அதற்கு தடையாக வந்துவிட்டது. சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் உற்சாகப்படுத்தும் வகையில் முப்பெரும் விழாவை நடத்த வேண்டும் என ஸ்டாலின் விரும்பினாலும் கொரோனா அதற்கு வழிவிடுவதாக தெரியவில்லை. இதனால் இந்தாண்டு மிக எளிமையாக அண்ணா அறிவாலயத்தில் முப்பெரும் விழா நடைபெறவுள்ளது.

திமுக விருதுகள்
முப்பெரும் விழாவன்று பெரியார் விருது மீனாட்சி சுந்தரத்திற்கும், அண்ணா விருது முனைவர் ராமசாமிக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கலைஞர் விருது முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம்.உபயதுல்லாவுக்கும், பாவேந்தர் விருது தமிழரசிக்கும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் விருது சுப.ராஜகோபாலுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காணொலி மூலம்
கடந்த மார்ச் மாதம் இறுதி முதல் கட்சி நிகழ்ச்சிகள், சந்திப்புகள், ஆலோசனைகள், படத்திறப்பு நிகழ்ச்சிகள் என அனைத்தையும் காணொலி மூலமாகவே நடத்தி வரும் மு.க.ஸ்டாலின், 6 மாதத்திற்கு பிறகு முதல் முறையாக நேரடியாக இந்த நிகழ்ச்சியை நடத்த இருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னணி தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் ஆகியோருக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்படும் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications