எனக்கு கூடத்தான் 7 நாட்களாக தூக்கம் வரல! நீதிமன்றம் மீது நம்பிக்கை கொண்ட கட்சி திமுக! -R.S.பாரதி
சென்னை: அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, KKSSR ராமச்சந்திரன் ஆகியோருக்கு எதிராக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கும் வழக்கு குறித்து உச்சநீதிமன்றத்தில் எடுத்துச் செல்வோம் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் அவர்களை விடுவித்து உத்தரவிட்டது. இதனிடையே அந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்.

மேலும், இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து படித்தபிறகு தமக்கு 3 நாட்களாக தூக்கம் வரவில்லை என அவர் கூறியிருந்தார். இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, தனக்கு கூடத்தான் 7 நாட்களாக தூக்கம் வரவில்லை என்றும் தூக்கம் வரவில்லை என்றால் என்ன நோய் என்று மருத்துவரை தான் பார்க்க வேண்டும் எனவும் நீதிபதியை நேரடியாக குறிப்பிடாமல் சூசகமாக விமர்சித்தார்.
மேலும், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் ஆகியோர் மீதான வழக்கு குறித்து அண்ணாமலை பேசிய பிறகு தான் நீதிபதி ஆனந்த் வெங்கடேஸ் இதனை தாமாக முன் வந்து விசாரிக்கிறார் என நினைக்கிறீர்களா என்ற செய்தியாளர் கேள்விக்கு அதனை உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகிறேன் என ஆர்.எஸ்.பாரதி பதில் அளித்தார்.
நீதிமன்றம் மீது திமுகவுக்கு நம்பிக்கையும், மரியாதையும் உள்ளது என்றும் நீமன்றம் மூலம் பல வெற்றிகளை பெற்ற இயக்கம் திமுக எனவும் குறிப்பிட்டார். இதனிடையே கூட்டத்தில் பேசியதற்காக தமது மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டதும் இதே நீதியரசர் தான் என்றும் ஆனால், அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது எனவும் சுட்டிக்காட்டினார்.
எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரிய விவகாரத்தில் நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தை வீணடிக்கக் கூடாது எனக் கூறிவிட்டு முடிந்து போன வழக்கை மீண்டும் விசாரித்து நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தை செலவிடுவேன் என்கிறாரே என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மீதான தனது அதிருப்தியை சூசகமாக வெளிப்படுத்தினார்.












Click it and Unblock the Notifications