“திமுக காரங்க மோடி, அமித் ஷா காலில் விழுறாங்களா இல்லையானு பாருங்க” - பிரச்சாரத்தில் விஜய் அட்டாக்!
சென்னை: "ஒரு பக்கம் சிறுபான்மையினர் ஓட்டுக்காக காங்கிரஸை உள்ள தூக்கி போட்டுட்டாங்க. இன்னொரு பக்கம் பாஜக கூட அண்டர் க்ரவுண்ட் டீலிங். ஒரு பக்கம் காவி வேஷம். இன்னொரு பக்கம் கதர் வேஷம். நான் திமுக - பாஜக அண்டர் க்ரவுண்ட் டீலிங்னு சொன்னது இப்போது இந்தியா முழுவதும் ஒலிக்குது. மம்தா பானர்ஜியே ஸ்டாலினை பாஜகவோட சேர்த்து வச்சு விமர்சிச்சிருக்காங்க. ஆட்சியை இழந்ததுக்கு அப்புறம் இந்த திமுக காரங்க மோடி கால்லயும் அமித் ஷா கால்லயும் விழறாங்களா இல்லையானு பாருங்க" என கொந்தளித்துப் பேசியுள்ளார் விஜய்.
கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவம் நடந்து ஆறு மாதங்கள் கடந்த நிலையிலும், விஜய் மீண்டும் கரூர் பகுதிக்கு செல்லவில்லை. சட்டசபை தேர்தல் பிரச்சாரத்திற்கு கூட கரூருக்கு விஜய் செல்லவில்லை. கரூர் மட்டுமல்லாமல் இன்னும் பல மாவட்டங்களுக்கும் விஜய் பயணிக்கவில்லை.

விஜய் நேரில் வராத குறையைத் தீர்க்க, பிரச்சார வாகனங்களில் விஜய்யின் சிலைகளை வைப்பது, அவரைப் போலவே உருவ ஒற்றுமை கொண்ட நபர்களைக் கொண்டு வாக்குச் சேகரிப்பது மற்றும் 'ஹோலோகிராம்' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விஜய்யின் பிம்பத்தைத் திரையில் தோன்றிப் பேச வைப்பது போன்ற மாற்று வழிகளை அக்கட்சியினர் பின்பற்றி வருகின்றனர்.
இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தின் கடைசி நாளான இன்று, நந்தனம் YMCA மைதானத்தில் தவெக தலைவர் விஜய் தனது கடைசி பிரசார உரையை ஆற்றினார். அப்போது விஜய் பேசுகையில், "தமிழ்நாட்டுல இதுவரைக்கும் வாங்காத அளவுக்கு ஐந்தரை லட்சம் கடனை திமுக அரசு வாங்கி வைத்திருக்கிறது. எல்லா வரியையும் ஏற்றி வைத்திருக்கிறார்கள். விக்கிரவாண்டி மாநாட்டில் நாம் கொள்கைகளாக அறிவித்த எதிலிருந்தும் ஒரு இன்ச் கூட மாறவில்லை. மதச்சார்பற்ற சமூகநீதி கொள்கையிலிருந்து மாறப் போவதில்லை. 100% இந்த விஜய்யை நம்பலாம். எம்மதமும் சம்மதம்.
நான் ஸ்டாலின் சார் மாதிரி கிடையாது. சொன்னா மாறமாட்டேன். ஒரு பக்கம் சிறுபான்மையினர் ஓட்டுக்காக கோடிகளை கொட்டி காங்கிரஸை உள்ள தூக்கி போட்டுட்டாங்க. இன்னொரு பக்கம் பாஜக கூட அண்டர் க்ரவுண்ட் டீலிங். ஒரு பக்கம் காவி வேஷம். இன்னொரு பக்கம் கதர் வேஷம். நான் திமுக - பாஜக அண்டர் க்ரவுண்ட் டீலிங்னு சொன்னது இப்போது இந்தியா முழுவதும் ஒலிக்குது. மம்தா பானர்ஜியே ஸ்டாலினை பாஜகவோட சேர்த்து வச்சு விமர்சிச்சிருக்காங்க. ஆட்சியை இழந்ததுக்கு அப்புறம் இந்த திமுகக்காரங்க மோடி கால்லயும் அமித் ஷா கால்லயும் விழறாங்களா இல்லையானு பாருங்க." எனப் பேசினார்.
மேலும் பேசிய விஜய், "40 வயசுக்கு கீழ 2 கோடியே 30 லட்ச சொச்சம் இருக்காங்க. 50 வயசுக்கு கீழ இருக்க பெண்கள் மட்டும் 1 கோடியே 30 லட்ச சொச்சம் பேர் இருக்காங்க. கருத்துக்கணிப்பு எடுக்குறவங்களுக்கு 60 வயசுக்கு மேலானவங்க மத்தியில நமக்கு இருக்குற ஆதரவு தெரியலையா? திமுகவோட ஆட்சிக் கனவு ஊழல் கனவு எல்லாம் கதம் கதம்தான். பாண்டிச்சேரில நடந்த மாதிரியே இங்கேயும் பெரியளவுல வாக்குப்பதிவு நடக்கணும். ஸ்டாலின் சாரை வீட்டுக்கு அனுப்பியே ஆகணும்.
விஜய் வெளியவே வரமாட்டான்னு விமர்சிக்கிறாங்க. அப்டி சொல்றது யாருன்னு பார்த்தா பத்து தோல்வி அடைஞ்ச அனுபவசாலி. நீங்க சேலத்துல போயி ஒதுங்கிக்காம, வெளியே வாங்க பார்ப்போம். நாம நிறுத்துன வேட்பாளரை அவர் விலைக்கு வாங்குறாரு. எடப்பாடியில நம்ம சார்பா நிக்குற டி.வி சின்னத்துக்கு முழு ஆதரவு கொடுங்க." எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "திமுக, அதிமுகவுக்கும் பொதுவா இருக்குற பாஜக, நம்மை நடிகன்னு விமர்சிக்குது. ஆமா நடிகன் தான். ஆனா, அரசியலுக்கு வந்து நடிக்கலையே. நீங்கதான் திமுக, அதிமுகவோட சேர்ந்து நடிக்கிறீங்க. இந்த இரண்டு கட்சியும் நமக்கு வேண்டவே வேண்டாம். இது மாற்றத்துக்கான தேர்தல். போகி பண்டிகைக்கு பழசை தூக்கி எறியுற மாதிரி, 75 வருச பவளவிழா பாப்பாவையும் 55 வருச பல்லாங்குழி பாப்பாவையும் தூக்கி போடுவோம். எல்லாரும் சேர்ந்து நம்மை எதிர்க்குறாங்க. ஏன்னா ஒட்டுமொத்தமா எல்லாரும் சேர்ந்து ஒரே கூட்டணியில இருக்காங்க.
என்ன தப்பு செஞ்சான் இந்த விஜய்? மக்களுக்காக அரசியலுக்கு வந்தது தப்பா? ஒவ்வொரு வீட்டிலயும் இருக்குற என்னோட குட்டி நண்பர்களே, எப்படி சாக்லேட் கேட்டு அடம் பிடிப்பீங்களோ அதேமாதிரியே விசில் சின்னத்துக்கு ஓட்டு போட சொல்லுங்க." எனக் கேட்டுக் கொண்டார்.
கரூர் சம்பவம் பற்றி பேசிய விஜய், "ஏன்டா இந்த விஜய்க்கு எதிரா சூழ்ச்சி செஞ்சோம்னு நினைச்சு நினைச்சு பீல் பண்ணுவீங்க.. நான் உங்களுக்கு என்ன கெடுதல் செஞ்சேன்? உங்க சாப்பாட்டுல மண்ண அள்ளி போட்டேனா? கரூர் விஷயத்தில் என் மீது பழி போடுகிறீர்களே? லேட்டா வந்தேன்னு சட்டமன்றத்துலயே கொஞ்சம் கூட வாய் கூசாம பொய் சொல்றீங்க? கரூரில் என்ன நடந்தது என அந்த பகுதி மக்களிடம் கேட்டாலே அவர்கள் உண்மையை சொல்வார்கள்.
நான் போலீஸ் கொடுத்த டைம்க்குதான் வந்தேன். நாமக்கல்ல இருந்து கரூர் வரைக்கும் எனக்காக காத்திருந்த மக்களை அம்போனு விட்டுட்டு வர சொல்றீங்களா? உங்களுக்கு மனசாட்சி இல்லையா? உங்க மேல எந்த தப்பும் இல்லைல, அப்புறம் ஏன் கரூர்லயே நின்ன உங்க அடிமை தொகுதி மாறிப் போறாரு? உங்களுக்காக நீதி கேட்க வந்த நான் இப்போ உங்கக்கிட்ட நீதி கேட்டு வந்திருக்கேன். எனக்கு எப்படி நீதி கொடுக்கணும்னு உங்களுக்கு தெரியும்" எனப் பேசியுள்ளார் விஜய்.













Click it and Unblock the Notifications