திமுகவுடன் முடிந்த டீல்? ராமதாஸுக்கு 3 சீட்! உதயசூரியனில் போட்டியிடப் போகும் 3 வேட்பாளர்கள் யார்?
சென்னை: 2026 தேர்தலை முன்னிட்டு திமுக, கூட்டணி பேச்சு வார்த்தைகளை இறுதி செய்யும் முடிவுக்கு வந்துள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியில் அன்புமணி ராமதாஸ் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து இருக்கும் நிலையில் நிறுவன ராமதாஸ் திமுகவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையை முடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கூட்டணியில் சேர்ந்தால் ராமதாஸ் தரப்புக்கு மூன்று சீட்டுகள் தர திமுக தரப்பு முன்வந்துள்ளதாகவும், அதில் யார் யார் போட்டியிடப் போகிறார்கள் என்ற தகவலும் தற்போது கசிந்துள்ளது. ஆனால், இதுவரை இல்லாத வகையில் ராமதாஸ் தரப்பு திமுக சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகவும்க் கூறப்படுகிறது.
பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை மகன் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், கட்சியும் கட்சி பிளவுபட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி அன்புமணி ராமதாஸ் தான் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் என தற்போதைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் நான் தான் தலைவர் முடிவெடுக்கும் அதிகாரம் எனக்குத் தான் உள்ளது என ராமதாஸ் கூறி வருகிறார்.

திமுக பாமக கூட்டணி
இதற்கிடையே அதிமுகவுடன் அதிகாரப்பூர்வமாக அன்புமணி ராமதாஸ் கூட்டணி சேர்ந்துள்ள நிலையில் 18 இருந்து 20 தொகுதிகள் வரை ஒதுக்கவும், கூடுதலாக ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தரவும் அதிமுக முன்வந்துள்ளது. அதே நேரத்தில் ராமதாஸ் என்ன முடிவெடுக்கப் போகிறார்? என்பது ஏற்கனவே தெரிய வந்தது தான். கடந்த நான்காண்டுகளாக திமுகவை கடுமையாக விமர்சித்து வந்த ராமதாஸ் தற்போது மென்மையான போக்கை கடைபிடித்து வருகிறார்.
ராமதாஸ் பேச்சுவார்த்தை
இதற்கிடையே திமுக தரப்பில் இருந்து 'ராஜ' அமைச்சர் ஒருவர் ராமதாஸ் தரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்படுகிறது. இதை அடுத்து திமுக கூட்டணியில் சேர்ந்தால் ராமதாஸ் தரப்புக்கு மூன்று சீட்டுகள் தர திமுக முன்வந்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. தற்போதைய நிலவரப்படி ராமதாஸின் மகள் ஸ்ரீகாந்தி, ஜிகே மணி, அருள் ஆகியோருக்கு தொகுதிகள் ஒதுக்கப்படும் என தகவல் கசிந்துள்ளது.
ராமதாஸ் திமுக பேச்சு
அதே நேரத்தில் பாஜகவின் ஆதரவு அன்புமணி ராமதாஸுக்கு இருக்கும் நிலையில் திமுக கூட்டணியில் ராமதாஸ் இணைந்தால் திமுக சின்னத்திலேயே மூவரும் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனை முன் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனிடைய தனிச் சின்னத்தில் போட்டியிட ராமதாஸ் தரப்பு திட்டமிட்ட நிலையில், அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாததால் திமுக சின்னத்தில் தான் போட்டியிட வேண்டிய நெருக்கடி ராமதாஸ் தரப்புக்கு உருவாகி உள்ளதாக சொல்லப்படுகிறது.
விடுதலை சிறுத்தைகள்
அதே நேரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உடனும் சமாதான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. பாமக திமுக கூட்டணியில் இணைவது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், அது தொடர்பாக கருத்து சொல்ல முடியாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications