மீண்டும் உயர்கல்வித் துறை அமைச்சரானார் பொன்முடி.. பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர்
சென்னை: உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதன் எதிரொலியாக பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணத்தை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி செய்து வைத்தார். பொன்முடிக்கு அவர் ஏற்கெனவே வகித்து வந்த உயர்கல்வித் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வருமானத்திற்கு அதிகமான வழக்கில் பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோர் குற்றவாளி என கூறிய சென்னை உயர்நீதிமன்றம் அவர்களுக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனையும் தலா ரூ 50 ஆயிரம் அபராதமும் வழங்கி தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து பொன்முடி , உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அப்போது உயர்நீதிமன்ற அளித்த தீர்ப்பும் தண்டனையும் நிறுத்தி வைக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன் மூலம் பொன்முடி குற்றமற்றவர் என்ற அர்த்தமாகிறது. இந்த நிலையில் பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்குமாறு உச்சநீதிமன்ற நகலுடன் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பியிருந்தார்.
ஆனால் ஆளுநர் ரவியோ, பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என கூறிவிட்டார். இதையடுத்து தமிழக அரசு, ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அந்த வழக்கு நேற்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது பொன்முடியின் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்ட பிறகும் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ரவி மறுப்பதற்கு யார் அதிகாரம் கொடுத்தது, ஆளுநருக்கு சட்டம் தெரியுமா தெரியாதா, நாளைக்குள் (இன்றுக்குள்) பொன்முடிக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைக்காவிட்டால் நாங்கள் உத்தரவு பிறப்பிப்போம் என காட்டமாக தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து ஆளுநர் ரவியை உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சித்த நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது.

இது தொடர்பாக மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் நேற்றே ரவியிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. இந்த நிலையில் பிற்பகல் 3.30 மணிக்கு பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி ராஜ்பவனுக்கு சென்ற பொன்முடிக்கு, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணத்தை செய்து வைத்தார். அவருக்கு மீண்டும் உயர்கல்வித் துறை இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications