நாங்குநேரிக்கு 5.. விக்கிரவாண்டிக்கு 5.. மொத்தம் 10 நாட்கள்.. ஸ்டாலின் சூறாவளி பிரச்சாரம்!
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் தலா 5 நாட்கள் வீதம் மொத்தம் 10 நாட்களுக்கு பிரச்சாரம் செய்கிறார்.
இதற்கான பயணத்திட்டத்தை திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய உள்ள தேதிகளின் விவரம் மட்டுமே தரப்பட்டுள்ளது. தொகுதிகளில் உள்ள இடங்களுக்கு செல்வது குறித்து மாவட்டச் செயலாளர் தரப்பில் நிகழ்ச்சி நிரல் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

அதன் படி, அக்டோபர் மாதம் 3,4-ம் தேதிகளில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து முதற்கட்ட பிரச்சாரம் செய்கிறார் மு.க.ஸ்டாலின். அதைத்தொடர்ந்து, 5,6-ம் தேதிகளில் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு கோரி முதற்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.
இதனிடையே அக்டோபர் 12,13,14-ம் தேதிகளில் நாங்குநேரி தொகுதியில் மு.க.ஸ்டாலின் மீண்டும் இரண்டாம் கட்ட பிரச்சாரம் மேற்கொள்வார் என திமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. இடையில் 2 நாட்கள் ஓய்வெடுக்கும் ஸ்டாலின் அக்டோபர் 17,18,19-ம் தேதிகளில் விக்கிரவாண்டி தொகுதியில் இரண்டாம் கட்ட பரப்புரை மேற்கொள்கிறார்.
2 தொகுதிகளிலும் மொத்தம் 10 நாட்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை செய்கிறார். திமுக வேட்பாளருக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் போன்றே, கூட்டணிக்கட்சியான காங்கிரஸ் வேட்பாளருக்கும் அவர் முக்கியத்துவம் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் தங்கள் பிரச்சார பயணத்திட்டத்தை வகுத்து வருகின்றனர். நாளை அது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications