நீங்க எங்க கூட தான் இருக்கீங்க... என்ன சந்தேகம்... வேல்முருகனுக்கு நம்பிக்கை தந்த ஸ்டாலின்
சென்னை: வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் தனக்கான இடத்தை உறுதிசெய்துள்ளார் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்து பேசிய அவர், சட்டமன்ற தேர்தல் தொடர்பாக சில விவகாரங்களை மனம் விட்டு பேசியுள்ளார்.
திமுக தனித்து போட்டி, கூட்டணிக் கட்சிகளுக்கு குறைந்த இடம் என்றெல்லாம் கடந்த ஒரு வாரமாக வதந்தி பரவியதால் வேல்முருகன் தனது ஐயத்தை தீர்த்துக்கொண்டார்.

குற்றச்சாட்டு
திமுக கூட்டணியில் இன்னும் அதிகாரப்பூர்வமாக இணையவில்லை என்றாலும், கடந்த மக்களவைத் தேர்தல் முதல் திமுகவை ஆதரித்து வருகிறது தமிழக வாழ்வுரிமை கட்சி. குறிப்பாக பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து ராமதாசுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார் வேல்முருகன். கடந்த மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது கோவையில் நடந்த பொதுக்கூட்டத்தில் வன்னிய அறக்கட்டளை தொடர்பாக வேல்முருகன் முன்வைத்த குற்றச்சாட்டுகள் அந்த சமுதாய மக்களிடையே வெகுவாக சென்று சேர்ந்தது.

திடீர் ஐயம்
இதனிடையே திமுக ஆதரவு தளத்தில் இயங்கி வரும் வேல்முருகன், சட்டமன்ற தேர்தலில் தனக்கான இடம் குறித்து குழப்பம் அடைந்தார். அதற்கு காரணம் பிரசாந்த் கிஷோர் வரவும் ஒன்று. அவர் திமுகவை தனித்து போட்டியிட வைக்க முயற்சிக்கிறார் என்றும், குறிப்பிட்ட கட்சிகளை மட்டும் கூட்டணியில் இணைக்கலாம் என கூறிவிட்டதாகவும், இதனால் சிறிய கட்சிகள் புறக்கணிக்கப்படும் எனவும் கடந்த ஒரு வாரமாக வதந்தி பரவியது. இதனால் ஸ்டாலினை நேரடியாக சந்தித்து என்ன நிலைப்பாடு என்பது பற்றி தெரிந்துகொள்ள வேல்முருகன் ஆர்வம் காட்டினார்.

அறிவாலயம்
அதைத்தொடர்ந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்றவர்களை அழைத்துக்கொண்டு ஸ்டாலினை சந்திப்பதற்காக அண்ணா அறிவாலயத்துக்கு நேற்று சென்ற அவர், அங்கு மனம் விட்டு சில விவகாரங்களை பேசியிருக்கிறார். திமுகவுடன் தொடர்ந்து பயணிக்க விரும்புவதாக தனது விருப்பத்தை கூறியுள்ளார். அதைக்கேட்ட ஸ்டாலின், அதற்கென்ன தாராளமாக இருங்கள், நீங்க எங்க கூடத்தான் இருக்கீங்க, நாம தேர்தலை இணைந்து சந்திப்போம் எனக் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

மகிழ்ச்சி
இதனிடையே ஸ்டாலினை சந்தித்த பின்னர் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது. இதுமட்டுமல்லாமல் பேட்டியின் போது ஒரு கட்டத்தில் இந்த சந்திப்பு மன நிறைவு தருகிறது என அவரே வெளிப்படையாக கூறியதும் கவனிக்கத்தக்கது. திமுக கூட்டணியில் கடலூர் அல்லது தருமபுரி மாவட்டத்தில் வேல்முருகனுக்கு ஒரு தொகுதி உறுதி எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications