தொகுதி பங்கீடு… திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முக்கிய ஆலோசனை
சென்னை: திமுக தொகுதி பங்கீடு குழுவுடன் அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
ஓரிரு மாதங்களில் நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி கூட்டணி பேச்சுவார்த்தை மும்முரமாக நடந்து வருகிறது.
தேமுதிகவை கூட்டணியில் இணைப்பது குறித்து இன்றைய ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், இந்திய முஸ்லிம் லீக், கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

மு.க. ஸ்டாலின் ஆலோசனை
அதேநேரம், அந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இட ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. திமுக தொகுதி பங்கீடு குழு நடத்திய பேச்சுவார்த்தை குறித்து அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

மதிமுகவுக்கு 2 இடங்கள்?
இதற்கிடையே, மதிமுக இரண்டு இடங்களில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இரண்டு இடங்களை ஒதுக்க கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

திமுக முயற்சி
அதிமுக கூட்டணியில் பாமக இணைந்துள்ள நிலையில், தேமுதிகவை தங்களது கூட்டணியில் இணைக்க திமுக முயற்சி மேற்கொண்டு வருகிறது, அதன்படி, தேமுதிகவுக்கு நான்கு இடங்களை ஒதுக்க காங்கிரசிடம் ஒரு இடத்தை விட்டுத் தர திமுக கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிகிறது.

பிரச்சாரம்
அதிமுக தலைமையிலான கூட்டணி அமைந்து விட்ட நிலையில், பிரதமர் மோடி வருகிற 6ம் தேதி சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார், இந்த நிலையில், திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு இட ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் அந்த கூட்டணி கட்சி தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications