கொரோனா நோய்ப்பரவல் கட்டுக்குள் இல்லை... மறைக்க நினைப்பது மாபெரும் துரோகம் -மு.க.ஸ்டாலின்
சென்னை: கொரோனா நோய்பரவல் கட்டுக்குள் இல்லை என்றும், அதனை மறைக்க நினைப்பது மக்களுக்குச் செய்யும் மாபெரும் துரோகம் எனவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேதான் போகிறதே தவிர, குறைந்த மாதிரித் தெரியவில்லை என அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

அடுத்தக்கட்டம்
கொரோனா நோய்த் தொற்றினைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அமல்படுத்தப்பட்டு வரும் நான்காம் கட்ட ஊரடங்கு இன்னும் இரண்டு நாட்களில் முடிவடைய இருக்கிறது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட இருக்கிறதா அல்லது முழுமையாக விலக்கிக் கொள்ளப்படுமா என்பதில் மத்திய - மாநில அரசுகள் தங்கள் முடிவை இன்னமும் அறிவிக்கவில்லை. கடைசி நிமிடம் வரைக்கும் மக்களைக் காத்திருக்க வைத்திருப்பதும், மக்களைப் பதற்றத்திலேயே வைத்திருப்பதும் மிகமோசமான செய்கைகள் ஆகும்.

முக்கியக் கடமை
நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதற்கு, ஊரடங்கைத் தவிர வேறு வழியில்லை என்று, இதுவரை எடுத்துரைத்து வந்த இரண்டு அரசுகளும், தொற்றுப்பரவல் குறையாத நிலையில், என்ன மாதிரியான முடிவுகள் எடுக்க இருக்கிறார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும் அதற்கு மக்களைத் தயார்ப் படுத்துவதும், மக்களுக்கு முன்கூட்டியே சொல்வதும், அரசாங்கத்தின் முக்கியக் கடமையாகும்.

அறிகுறி இல்லை
தொற்று ஏற்பட்டவர்களைத் தனிமைப் படுத்துவதற்கு ஏராளமான திருமண மண்டபங்கள், கல்லூரிகள், பள்ளிகளை ஏற்பாடு செய்து வைத்துள்ளோம் என்று சொல்லும் அரசு, அங்கு அவர்களைத் தங்க வைக்கத் தயங்குவது ஏன்?‘பாசிட்டிவ்' என்று உறுதி செய்யப்பட்டவர்களையும், "உங்களுக்கு அறிகுறி இல்லை" என்று சொல்லி வீட்டுக்கு அனுப்பி வைப்பதால்தானே இந்தப் பரவல் அதிகம் ஆகிறது என்பதை அரசு உணர்ந்ததா?

நானும் செயல்படுகிறேன்
இப்படி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுபவர்கள், அரசாங்கத்தால் கண்காணிக்கப்படுகிறார்களா?அவர்கள் முறையாகக் கண்காணிக்கப்பட்டு இருந்தால் இந்தளவுக்குச் சென்னையில் நித்தமும் எண்ணிக்கை அதிகமாகி வருமா? தினமும் ஆலோசனைகள் செய்யும் முதலமைச்சர், என்ன மாதிரியான ஆலோசனை செய்கிறார்? அவரும் கணக்குக் காட்ட, "நானும் செயல்படுகிறேன்" என்பதை ஊருக்குச் சொல்வதற்காக, நாள்தோறும் ஆலோசனை நாடகங்களை நடத்துகிறாரா?

உணரவேண்டும்
நோயை மறைக்க முடியாது. அது இன்று இல்லாவிட்டாலும் இரண்டு நாளில் வெளியில் வந்துவிடும். எனவே, நோயை மறைப்பது என்பது தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும் ஆபத்து என்பதை முதலமைச்சர் உணரவேண்டும். தினமும் மாலையில் ஏதோ எண்ணிக்கையைச் சொல்வதோடு கடமை முடிந்ததாக நினைக்கக் கூடாது.












Click it and Unblock the Notifications